

மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட்டில், இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) உள்பட இணை மருத்துவத் துறையினர் - மருத்துவத் துறை வல்லுநர்கள் (Allied & Healthcare Professionals) மீது வலுவான கவனம் செலுத்தப்பட்டிருப்பது, இந்திய சுகாதார நிர்வாக வடிவம் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை நோக்கி நகர்வதைச் சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாடு சுகாதாரக் கொள்கையில் புதிய கட்டமைப்பு மாற்றத்தை நோக்கிய வழிகாட்டுதலுக்கான அடித்தளமாகவும் இம்முன்னேற்றம் திகழ்கிறது.
ஒருங்கிணைந்த செயல்பாடு: சுகாதாரம் - இணை மருத்துவத் துறைகளின் கல்வி - ஆராய்ச்சி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,00,000க்கும் மேற்பட்ட சுகாதாரம், இணை மருத்துவத் துறையினரை அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயன்முறை மருத்துவம், ஆய்வகத் தொழில்நுட்பர்கள், மனநல ஆலோசகர்கள் உள்பட 56 மருத்துவத் துறையினர் சுகாதார - இணை மருத்துவத் துறையினராக இடம்பெற்றுள்ளனர்.
சுகாதாரம் என்பது மருத்துவர்கள், செவிலியர்களை மட்டும் மையமாகக் கொண்ட சேவை அல்ல. பல்துறை இணைந்த மனிதவளத்தின் திட்டமிட்ட, ஒருங்கிணைந்த செயல்பாடே என்பதை அரசாங்கம் கொள்கைரீதியாக ஏற்றுக்கொண்ட முக்கிய மாற்றம் இது.
தமிழ்நாடு அரசு, வேளாண் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆண்டுதோறும் தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கையைத்தாக்கல் செய்துவருகிறது. அதேபோன்று, மக்களின் உடல்நலம், உழைப்புத் திறன், சமூக நிலைத்தன்மை ஆகியவற்றை நேரடியாகத் தீர்மானிக்கும் சுகாதாரத் துறைக்கும் தனியான மாநில பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய காலம் வந்துள்ளது.
சமூக நலத் திட்டத்தின் துணைப் பிரிவாகவோ, வெறும் மருத்துவமனை நிர்வாகச் செலவாகவோ அல்லாமல் ஒரு மாநிலத்தின் மனித வள மேம்பாட்டுக்கான நீண்ட கால முதலீடாகச் சுகாதாரத் துறையை அணுக வேண்டும். சுகாதாரம் என்பது நோய் சிகிச்சையோடு நின்றுவிடுவதில்லை, அது செயல்திறன் மீட்பையும் உள்ளடக்கியது. இந்தப் புள்ளியில் அரசு நிர்வாகம் தனது பொறுப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.