

திரும்பிய பக்கம் எல்லாம் தேர்தல் என்பதே பேச்சு. வாக்குறுதிகளும் பரப்புரைகளும் வேகம் பிடித்துவிட்டன. ஒரு புறம் மக்கள்நலப் பணிகள், தொழில் முன்னேற்றம், பரவலான வளர்ச்சி முதலான சாதனைகள் முன்னிறுத்தப்படுகின்றன. மறுபுறம் ஊழல், கடன் சுமை, போதைப் பொருள் பரவல் முதலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இரண்டுக்கும் இடையில் அதிகம் பேசப்படாத அம்சங்களுள் ஒன்று, உள்கட்டுமான வசதி. தமிழகம் அதிவேகமாக நகரமயமாகி வருகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி தமிழகத்தில் 48.5% மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள் (தேசிய சராசரி 31%).
இவர்களின் நல்வாழ்வுக்குத் தரமான உள்கட்டமைப்பு அவசியம். உள்கட்டமைப்பில் போக்குவரத்து, வீட்டு வசதி, குடிநீர் வழங்கல், கழிவுநீர்-மழைநீர் அகற்றல், மின்சாரம் முதலானவை அடங்கும். தமிழகத்தில் அடுத்துப் பொறுப்பேற்கும் அரசு இந்தத் துறைகளில் என்னென்ன செய்ய வேண்டும்?
வீட்டு வசதி
தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்று. விளைவாக, நகரங்களில் மனையிடங்களின் விலையும் ரியல் எஸ்டேட் துறையின் ஆதிக்கமும் அதிகமாகிவிட்டது. நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்கவும் கட்டவும் சிரமப்படுகிறார்கள்.
நகரின் வளர்ச்சிக்காக உழைக்கும் எளிய மக்கள் அதே நகரின் விளிம்புகளுக்குத் தள்ளப்படுகிறார்கள். வீட்டு வசதித் திட்டங்களை அரசு விரிவுபடுத்த வேண்டும். நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசே வீடு கட்டித் தரலாம்.
இதற்காகச் சேமநல நிதி தொடங்கி, அதிலிருந்து குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம். நகர்ப்புறத்தின் முறைசாராத் தொழிலாளர் நலனுக்காக, 1971இல் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தொடங்கப்பட்டது குடிசை மாற்று வாரியம். இதன் புதிய பெயர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம். இந்த வாரியத்தின் செயல்திறன் கடந்த காலங்களில் குறைந்துவிட்டது. அதை மேம்படுத்த வேண்டும்.
சாலைகள்
தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசாலும், மாவட்டச் சாலைகள் மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையாலும், நகரச் சாலைகள் நகராட்சிகளாலும், கிராமச் சாலைகள் ஊராட்சிகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன. அந்தந்தச் சாலைகள், அவற்றில் ஓடும் வாகனங்களின் பாரத்துக்கும் எண்ணிக்கைக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டவை.
ஆதலால், அவற்றின் தாங்குதிறன் மேற்கூறிய வரிசையில் இறங்குமுகமாக இருக்கும். பொறியியல் ரீதியில் அது சரியானது. ஆனால், கெடுவாய்ப்பாக அவற்றின் தரமும் இதே வரிசைப்படி இறங்குமுகமாக இருக்கிறது. மேலை நாடுகளில் இப்படி இராது.