

கடந்த டிசம்பர் 26இல், திருத்தணி பழைய ரயில்வே குடியிருப்பு அருகே வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் என்கிற இளைஞரை அரிவாளால் தாக்கிய நான்கு சிறுவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர்.
பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்ட இவர்களுக்குச் சராசரியாக 17 வயது. இன்ஸ்டகிராம் ரீல்ஸ் (Instagram reels) எடுப்பதற்காக ஆயுதங்களை வைத்திருந்த அவர்கள், மதுபோதையில் ரயிலில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தச் செயலை யாராலும் நியாயப்படுத்த முடியாது. அதே நேரத்தில், அச்செயலில் ஈடுபட்ட சிறாருக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்களை ‘என்கவுன்ட்டர்’ செய்ய வேண்டும் என்றும் அப்போது சிலர் பேசினர். இத்தகைய குற்ற நிகழ்வுகளில் சிறுவர்களைக் கொடூரக் குற்றவாளிகளாக அணுகுவது மட்டுமே தீர்வாகுமா?
முன்னூட்டக் கொள்கை
குழந்தைகள் மீது பழி சுமத்தி, நமது தவறுகளை மறைத்து எளிதாகக் கடந்துசெல்ல முயல்வது சமூகத்தின் பொதுப்புத்தி. மாறாக, இதற்குக் குழந்தை உரிமைகளைப் பாதுகாக்கும் கடமை உடைய அரசு, சமூகத்தின் செயல்பாடுகள் பேசப்பட வேண்டும்; இளமைப் பருவத்திலேயே தடம் புரளும்போது, அது ஒரு தனிநபரின் இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் தோல்வி.
சிறார் நீதிச் சட்டம் 2015இன் (Juvenile Justice Act, 2015) பிரிவு 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளில் முதலாவது / மிக முக்கியமானது - குற்றமற்றவர் என்னும் முன்னூட்டக் கொள்கை (Principle of Presumption of Innocence).
இதன்படி, ஒரு குழந்தை சட்டத்துக்குப் புறம்பான செயலைச் செய்திருந்தாலும், அச்செயலைச் செய்ய வேண்டும் என்கிற எந்தவிதமான தீய நோக்கமோ (Mala fide) அல்லது குற்றவியல் நோக்கமோ (Criminal Intent) அக்குழந்தைக்கு இல்லை என்றே கருத வேண்டும்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியும், மன முதிர்ச்சியும் முழுமை அடைந்திருக்காது. அவர்கள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சூழல், வறுமை அல்லது தவறான வழிகாட்டுதலின் காரணமாக நிகழ்கின்றனவே தவிர, திட்டமிட்ட குற்றப் புத்தியால் அல்ல என்பதை இக்கோட்பாடு வலியுறுத்துகிறது.