

அண்மையில், வியட்நாம் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தோம். வழக்கமாகச் சுற்றுலா நிறுவனங்கள் பட்டியலிடும் இடங்கள் என்றில்லாமல், சில குறிப்பிட்ட இடங்களைப் பார்க்க முடிவுசெய்திருந்தோம். அவற்றில் ஒன்றுதான் ‘சன் மய்’ என்னும் சிறிய கிராமம். உலகை உலுக்கிய ‘மைலாய் படுகொலைகள்’ நிகழ்ந்த இடம் அது.
மத்திய வியட்நாமில் குவாங் நை மாகாண நகரத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம்தான் சன் மய். இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1945இல் செம்படையினர் வியட்நாமின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
ஹோசிமின் தலைமையிலான கம்யூனிச நாடு என்பதால், அமெரிக்கா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் சூழ்ச்சி செய்து வியட்நாமை வடக்கு - தெற்கு என்று பிரித்தன. இதற்கு எதிராக இருந்த வியட்நாம் மக்கள், ஒன்றுபட்ட வியட்நாமுக்காகப் போராடிக்கொண்டிருந்தார்கள்.
அதைத் தடுக்க 1955 முதல் அமெரிக்கா தனது நேரடி ராணுவத்தை அனுப்பியது. 1975 வரை 20 ஆண்டுகள் நடைபெற்ற அப்போரில் கடைசிவரை வியட்நாமியர்களை வெற்றி கொள்ளவே முடியவில்லை. இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறியது அமெரிக்கா. எனினும், பல கொடுமைகளை நிகழ்த்த அமெரிக்கப் படையினர் தவறவில்லை. அவற்றில் ஒன்றுதான் - மைலாய் படுகொலைகள்!
அமெரிக்கர்களின் அட்டூழியம்: 1968 மார்ச் 16ஆம் நாள் - விவசாய விளைநிலங்கள் சூழ்ந்திருக்கும் மைலாய், சன் மய், போலுலி, ஃபூக்கே ஆகிய அருகமை கிராமங்கள் வழக்கம்போல விடியலைச் சந்தித்தன. அம்மக்களும் விவசாயப் பணிகளைச் செய்யப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அன்றைய நாள் காலை 6.00 மணிக்கு அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்களும் வந்து இறங்கின.
13 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ராணுவத்தைப் பார்த்துப் பழகியிருந்த வியட்நாம் மக்கள், அதைப் பொருட்படுத்தாமல் வழக்கம்போலத் தங்கள் பணிகளைச் செய்துகொண்டிருந்தார்கள். அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள், நடுத்தர வயது ஆண் போராளிகளின் படையான ‘வியட்காங்’கில் செயலாற்றுவதால், பெரும்பாலான ஆண்கள் அவ்வூரில் அந்நேரத்தில் இல்லை. ராணுவம் ஒன்றும் செய்யாது என்று நினைத்துக் கொண்டு இயல்பாகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.