வேத தரிசனமும் நவீன மானுடமும்

சக மனிதரை நேசிக்கத் தெரிந்த ஒருவருக்கு அவரது வாழ்வே வேதமாகிவிடுகிறது.
வேத தரிசனமும் நவீன மானுடமும்
Updated on
3 min read

தார்மிகச் செருக்கு கொண்ட எழுத்தாளர் ஜெயகாந்தன். வித்தைகள் எதையும் கற்காமல், வாழ்வியல் அனுபவங்களின் வழியே ‘வேத நுட்ப’ங்களை உணர்ந்தவர்.

வேதம் என்பது வெறும் மந்திரங்களின் தொகுப்பல்ல, அது சக மனிதனை நேசிக்கும் மகத்தான பண்பு என்பதைத் தன் படைப்புகள் வாயிலாகவும் மேடை உரைகள் வாயிலாகவும் உரக்கச் சொன்னவர். ஜெயகாந்தனின் ஒரு புகழ்பெற்ற உரையால் ஈர்க்கப்பட்டு, அதன் தாக்கத்தில் உருவானதே இக்கட்டுரை.

மாறாத உண்மைகளின் தீராத தேடல் மனித நாகரிகத்தின் தொடக்கப்புள்ளி எது? இந்த வினாவுக்குப் பல பதில்கள் இருக்கலாம். ஆனால், மனிதர்கள் எப்போது தங்களுக்கு வெளியே இருக்கும் பிரபஞ்சத்தையும், உள்ளே இருக்கும் மனதையும் உற்றுநோக்கத் தொடங்கினார்களோ, அங்கேயே உண்மையான நாகரிகம் வேர்விடத் தொடங்கியது.

அந்த உற்றுநோக்கலின் விளைவாக எழுந்த பேரொலிகளே ‘வேதங்கள்’. வேதம் என்பது ஏதோ ஒரு நிலப்பரப்புக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமான சொத்து அல்ல; அது ஒட்டுமொத்த மனித இனத்தின் அறிவுப் பெட்டகம்.

பழமைக்கும் பழமையாய், புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் இந்த ஞானம், இன்றைய இயந்திரமயமான உலகில் இன்னும் அதீத முக்கியத்துவம் பெறுகிறது. நாம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்கிற திகைப்பு எழும்போதெல்லாம், நீ யாராக இருக்கிறாய் என்று நம்மைத் தட்டி எழுப்பும் குரலே வேத தரிசனம்.

விசாலமான மனமே புனிதத்தலங்கள்

வேதங்களின் அடிப்படை என்பது அச்சமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல; அது ஒரு மகத்தான விடுதலை. ஒரு மனிதரின் மனம் எப்போது குறுகிய எல்லைகளைக் கடந்து விரிவடைகிறதோ, அப்போதுதான் அவருக்குள் வேத நுட்பங்கள் விளங்கத் தொடங்குகின்றன. நம் முன்னோர் கண்டறிந்த உண்மைகள் யாவும் தர்க்கத்துக்கும் மேலான, அனுபவரீதியான தரிசனங்கள்.

‘வித்தை ஏதுமறியாதவன் எனக்குள்ளே வேத நுட்பத்தை விளங்கச் செய்தாய்’ என்கிற வரிகள், கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

உண்மையான அறிவு என்பது இதயத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுப்பது. ஒரு விசாலமான மனம் என்பது ஒரு புனிதப் பிரதேசம் போன்றது. அங்கே துவேஷத்துக்கும், பாகுபாட்டுக்கும் இடமில்லை. சக மனிதரைத் தன்னைப் போலவே நேசிக்கத் தெரிந்த ஒருவருக்குத் தனியாக வேத பாடங்கள் தேவையில்லை; அவரது வாழ்வே ஒரு வேதமாகிவிடுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in