

வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் (வ.அய்.சு), அரபிக் கடற்கரையில் தாம் உருவாக்கிய திராவிட மொழியியல் பள்ளி வளாகத்தில் உறங்குகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஐரோப்பியப் புத்தொளி மரபின் தொடர்ச்சியாக, நம்மை ஆட்சி புரிந்தவர்கள் பல நிறுவனங்களை உருவாக்கினார்கள்.
தொல்லியல், மானுடவியல், மொழி ஆகிய பலவற்றுக்கு ஆய்வு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் தொல்பழந்தமிழ் குறித்த ஆய்வுகள் நடைபெறத் தொடங்கின. திராவிட மொழிக் குடும்பம் அடையாளப்படுத்தப்பட்டது. இதற்கு எல்லீஸ் (1777-1819), கால்டுவெல் (1814-1891) முதலானோர் பங்களிப்பு முதன்மையானது. திராவிடக் கருத்தியல் என்பது உருவானது. ‘இந்தியவியல்’ பற்றிப் பேசிய அறிஞர்களுக்கு ‘திராவிட இயல்’ பற்றிய அறிமுகம் கிடைத்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு முழுவதும் தமிழியல் எனும்திராவிட இயல் வளம் பெற்றது. இவ்வளத்துக்குக் கால்கோளிட்ட அறிஞர்களுள் வ.அய்.சு. முதன்மையானவர். இதனைப் பல்வேறு நிறுவன உருவாக்கம் மூலம் நிகழ்த்திக் காட்டினார்.