

சாலைகளில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க ‘வாகனம் டு வாகனம்’ (Vehicle-to-Vehicle - வி-டு-வி) என்கிற புதிய தொழில்நுட்பத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
விபத்துகளைத் தடுப்பதில் தொழில்நுட்பங்களின் துணையுடன் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மிகவும் அவசியமானவை.
குளிர்காலத்தில் அதிக விபத்துகள்: உலக அளவில் அதிக சாலை விபத்துகள் நிகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 45 லட்சம் விபத்துகள் நிகழ்வதாகவும், 1.50 - 1.68 லட்சம் பேர் விபத்துகளில் உயிரிழப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2025இல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 27 ஆயிரம் பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
பொதுவாக, இந்தியாவில் மோசமான சாலைக் கட்டமைப்புகள், மனிதத் தவறுகள், அதிவேகம், கவனக்குறைவு போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இந்தியாவில் குளிர்காலத்தில் 15 - 20% அதிகமாகவே விபத்துகள் நிகழ்கின்றன; டிசம்பர், ஜனவரி மாதங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன.
இந்தியாவில் நிலவும் புகை மூடுபனியால் வாகன ஓட்டிகளின் பார்வைத்திறன் குறைவது இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணம். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் குளிர்காலத்தில் புகைமூடுபனி தாக்கத்தின் விளைவால் வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகள் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். 2025-26 குளிர்காலத்தில் வட இந்திய மாநிலங்களில் ஏற்பட்ட 5 பெரிய சாலை விபத்துகளில் 135 பேர் உயிரிழந்தனர்.