தேடல்கள்தான் நம்மை வளர்க்கும்: வே.புருஷோத்தமன் நேர்காணல்
சென்னை புத்தகக் காட்சியோடு 40 ஆண்டு கால தொடர்பு, பபாசியோடு நீண்ட கால பயணம், பபாசியின் துணைத் தலைவர் பொறுப்பு, மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையின் நிர்வாகி, தமிழகம் முழுவதும் வாசிப்பு இயக்கங்களை முன்னெடுத்தல், தமிழகத்தின் அனைத்து மாவட்ட புத்தகக் காட்சிகளிலும் புத்தக விற்பனை என புத்தகங்களோடு நெருங்கிய தொடர்புடையவர் வே.புருஷோத்தமன். 49வது சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வரும் இந்த நேரத்தில், வாசகர்கள் மற்றும் வாசிப்பு பற்றி அவரிடம் உரையாடியதில் இருந்து...
காந்திய இலக்கியப் பண்ணையின் பணிகள் குறித்து...
மதுரை ரயில்வே நிலையத்தில் த.அருணாச்சலம், சு.லோகநாதன், சா.பாண்டியன் ஆகிய நிர்வாகக் குழுவினர் சேர்ந்து முதன்முதலாக தொடங்கினோம். பின்னர் 10 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சேர்ந்து மேல வெளி வீதியில் ஆரம்பித்தோம். மதுரையில் காந்திய, சர்வோதய, வினோபா பாவே கருத்துக்களை பரப்ப நிறுவப்பட்ட இயக்கம் இது. இன்று காந்திய சிந்தனை நூல்கள் மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு நூல்கள், புத்தக விற்பனை என இந்நிறுவனம் வளர்ந்துள்ளது. இன்று தமிழ்நாட்டு பதிப்பு மற்றும் புத்தக விற்பனைத் தளத்தில், தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை காந்திய இலக்கியப் பண்ணைப் பெற்றிருக்கிறது.
