

‘நாஸிக்கள் மட்டுமே உயர்ந்தவர்கள்; யூதர்கள் கொன்று ஒழிக்கப்பட வேண்டியவர்கள்; பூமி தம் கட்டைவிரலுக்குக் கீழ் சுழலும் பந்து’ என சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் கொக்கரித்த காலக்கட்டம் அது. ஹிட்லரின் இனவெறிக்குச் சாமரம் வீச அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் ஜெர்மானிய மானுடவியலாளர் ஆகன் ஃபிஷர்.
அவரது வழிகாட்டுதலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவியாகப் படித்த ஓர் இந்தியப் பெண், ஹிட்லரின் இனவெறிக் கோட்பாட்டைத் தகர்த்தெறிந்தார். அவர்தான் இந்தியாவின் முதல் பெண் மானுடவியலாளர் ஐராவதி கார்வே.
ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஐராவதியின் வாழ்க்கை வரலாற்றினை அவரது பேத்தி ஊர்மிளா தேஷ்பாண்டே இணை ஆசிரியராக இருந்து எழுதிய, ‘ஐரு: ஐராவதி கார்வேயின் அசாதாரண வாழ்க்கை’ (Iru: The Remarkable Life of Irawati Karve) கடந்த ஆண்டு வெளியானது.
ஜெர்மனியில் உள்ள லைப்ஸிக் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை ஆராய்ச்சியாளர் தியாகோ பின்டோ பார்போஸாவும் இந்நூலை இணைந்து எழுதியுள்ளார். ஐருவை கெளரவிக்கும் மிகைப்படுத்தப்படாத வாழ்க்கை வரலாறு எனப்படுகிறது இந்நூல்.
149 மண்டை ஓடுகள்: மயன்மாரில் (அன்று பர்மா) 1905இல் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் ஐராவதி பிறந்தார். புகழ்பெற்ற ஐராவதி நதியின் பெயர்தான் அவருக்குச் சூட்டப்பட்டது. குழந்தைத் திருமணம் சர்வசாதாரணமாக இருந்த காலத்தில், ஏழு வயது ஐராவதியை புணேயில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் தந்தை சேர்த்துவிட்டார்.