

பசுமைக் கொள்கை - நவீனத் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் சாலை மேம்பாட்டில் சிறந்து விளங்கியதற்காக மத்திய அரசின் விருதைத் தமிழ்நாடு பெற்றிருக்கும் நிலையில், 2024இல் மட்டும் 69,828 சாலை விபத்துகள் தமிழ்நாட்டில் பதிவாகியிருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தலைக்கவசம் அணியாத காரணத்தால் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பது பெரும் கவலை அளிக்கிறது. 2015இல் சாலை விபத்துகள் அதிகம் நிகழ்ந்த முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருந்த நிலையில் 69,059 விபத்துகளோடு தமிழ்நாடு இரண்டாம் இடம் வகித்தது.
10 ஆண்டுகள் கடந்த நிலையில் சாலை விபத்து உயிரிழப்புகளில் 10.2 சதவீத அளவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. அதிவேகம்தான் பெரும்பாலான உயிரிழப்புகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
அதிவேகமாக வாகனம் இயக்கியதால் 2024இல் 13,765 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். வாகனம் ஓட்டும்போது ஏற்படும் திடீர் உடல் நலக் குறைபாட்டாலும் போதுமான உறக்கமின்றி வாகனத்தை இயக்குவதாலும் ஏற்படும் உயிரிழப்புகள் ஒப்பீட்டளவில் குறைவு.
தமிழ்நாட்டில் 2014இல் 4,985 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் தற்போது 6,806 கி.மீ. அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. சிலர் இந்த வளர்ச்சியையும் பராமரிப்பையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தறிகெட்டு வாகனங்களை இயக்குவதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். காரணம், மாநில நெடுஞ்சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஏற்படும் விபத்துகள் அதிகம்.