

மர்ஜான் சத்ரபி காலமாகிவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது. அவருக்கு வயது 56. திரைப்படத் தயாரிப்பாளர், நடிகரான அவரது கணவர் மத்தியாஸ் ரிபா கடந்த ஆண்டு காலமான நிலையில், இந்த ஆண்டு மர்ஜானும் காலமாகி இருக்கிறார்.
‘பெர்சேபோலிஸ்’ என்கிற தன்வரலாற்றுப் படக்கதை நாவலின் மூலம் உலகப் புகழ்பெற்றவர் மர்ஜான். ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடுத்துள்ள இந்த வேளையில் ஈரானைப் பற்றி ஒரு தெளிவான பார்வையைப் பெற இந்த நூல் பெரிதும் உதவும்.
சில மாதங்களுக்கு முன் எந்த முன்னறிவிப்பும் இன்றி, உலகின் பழமை வாய்ந்த பெரும் நாகரிகத்தைப் பூண்டோடு அழிக்கப் புறப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கர்ஜித்தார். உலகின் பழமை வாய்ந்த அந்தப் பெரும் நாகரிகத்தின் சிறப்புகளை இந்த நூலின் மூலம் தெள்ளத்தெளிவாக நாம் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு சில அடிப்படைவாதிகளின் தவறான செயல்பாடுகளை வைத்து ஒரு நாட்டை மதிப்பிடக் கூடாது என்று இந்த நாவலின் மூலம் மர்ஜான் சத்ரபி கூறுகிறார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஈரானின் கச்சா எண்ணெய் வளத்துக்காக அந்நாட்டைக் கட்டுப்பாட்டில் எடுக்கத் தீவிரமாகச் செயல்பட்டு, அதில் பெருமளவு வெற்றியும் பெற்றது பிரிட்டன்.
இந்த நாவலின் ஓரிடத்தில் கச்சா எண்ணெய் இருக்கும்வரை ஈரானுக்கான பிரச்சினைகள் ஓயாது என்கிறார் மர்ஜானின் தந்தை சத்ரபி. எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள். இன்றைக்கு ஈரானைக் கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் போர் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இது எவ்வளவு உண்மை என்பது புரிகிறது. இப்படிப் பல்வேறு சமூக, அரசியல், பண்பாட்டுத் தெளிவுகளை இந்த நாவல் நமக்கு வழங்குகிறது.
சிந்தனையும் சுவாரசியமும்:
கிராஃபிக் நாவல் எனப்படும் படக்கதை நாவல்களில் உலகப் புகழ்பெற்றது இந்த நூல். இதுவரை 20 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. தமிழிலும் இந்த நூல்கள் வெளியாகியுள்ளன (ஈரான்: இளமைப் பருவம், ஈரான்: திரும்பும் காலம், மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன், விடியல் வெளியீடு).
தமிழில் படக்கதை நாவல் மொழிபெயர்க்கப்பட்டது அதுவே முதன்முறை. இந்த நூலில் மர்ஜான் சித்தரித்துள்ள ஈரானின் சிந்தனை மரபு, முற்போக்கு அம்சங்களுக்கும் தமிழ் மரபுக்கும் இடையே சில ஒப்புமைகளைக் கண்டுணர முடியும். உணர்ச்சிகளைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தும் வலுவான கறுப்பு-வெள்ளை ஓவியங்களைக் கொண்ட இந்த படக்கதை நாவல் பின்னர் திரைப்படமாகவும் வெளியாகிப் புகழ்பெற்றது.