

கேரள அறிவியல் இயக்கத்தின் முன்னோடியும் நாடறிந்த அணுசக்தி விஞ்ஞானியும் மார்க்சிய சிந்தனையாளருமான முனைவர் எம்.பி.பரமேஸ்வரன், ஆகஸ்ட் 11 ஆம் தேதி தனது 91 வயதில் காலமானார். இந்தியாவிலேயே மக்கள் அறிவியல் இயக்கத்துக்கு அடித்தளம் அமைத்தவர்களில் முதன்மையானவரான பரமேஸ்வரனின் மறைவு அறிவியல், இலக்கியம், சுற்றுச்சூழல், சமூகச் செயல்பாட்டு உலகுக்குப் பேரிழப்பாகும்.
கண் திறந்த கல்வி
இந்தியாவிலேயே திறன்மிக்க அணுசக்தி ஆய்வாளர்களை உருவாக்கும் நோக்கில் ஹோமி பாபா தீட்டிய திட்டத்தின் முதல் மாணவர் குழுவில் இணைந்தவர் பரமேஸ்வரன். அவரது மதி நுட்பத்தைக் கண்டு வியந்த அணுசக்தி நிறுவனம், மேலதிக உயர் கல்விக்காக மாஸ்கோவுக்கு அனுப்பியது.
மாஸ்கோவில், தாய்மொழியில் அறிவியல் சிறந்து தழைத்து வளர்வதையும், பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும் சமமாகப் பங்குபெறும் சோஷலிச சமுதாயத்தின் மனித வளர்ச்சியையும் கண்டு பரமேஸ்வரன் வியந்தார்.
இந்த அனுபவமே, இந்தியா திரும்பியதும் இந்திய மொழிகளில் அறிவியலை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவருக்கு ஊட்டியது. தனது 18 ஆண்டு கால அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனப் பணியைத் துறந்து, 1975 முதல் மக்கள் இயக்கத்தில் முழுநேரச் செயல்பாட்டாளராக ஈடுபடத் தொடங்கியதே அவரது வாழ்க்கையில் திருப்புமுனை. கேரளத்துக்குத் திரும்பிய அவர், கேரள சாஸ்திர சாகித்திய பரிஷத்தை (கேஎஸ்எஸ்பி) உருவாக்குவதில் ஈடுபட்டார்.
தனித்துவப் பங்கு
சிபிஎம் கட்சியின் உறுப்பினராக இருந்தபோதிலும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் கட்சி நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டுத் தனது துணிவான முடிவுகளை பரமேஸ்வரன் வெளிப்படுத்தினார்.
1970களில் கேரள அரசு அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைக்கத் திட்டமிட்டிருந்த நீர்மின் திட்டம் கேரளத்தின் மழைக்காடுகளை அழித்து, அங்குள்ள உயிர்ப் பன்மைக்குப் பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதை பரமேஸ்வரன் தனது அறிவியல் ஆய்வுகள் மூலம் நிருபித்தார்.
திட்டத்துக்கு சிபிஎம் கட்சி ஆதரவாக நின்றபோதும், மக்கள் அறிவியல் இயக்கத்தின் தலைவரான பரமேஸ்வரன், ‘வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிப்பதை நியாயப்படுத்த முடியாது’ என்று துணிச்சலாக எதிர்த்தார். இந்தப் போராட்டத்தின் விளைவாக நீர்மின் திட்டத்தைக் கைவிடும் நிலைக்கு கேரள அரசு தள்ளப்பட்டது.