

பன்னாட்டுப் பதிப்பாளர் சங்க (ஐ.பி.ஏ) சர்வதேச மாநாட்டில் பதிப்புத் துறையில் புத்தாக்க முயற்சிக்கான விருதுபெற்ற ஐலேசா நிறுவனர் ஆழி செந்தில்நாதன்.
பன்னாட்டுப் பதிப்பாளர்கள் சங்கத்தின் (International Publishers Association- IPA) 35வது மாநாடு கடந்த ஜூலை 5 முதல் 9 வரை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. 130 ஆண்டு காலமாக உலகப் பதிப்புத்துறையின் மைய அமைப்பாக விளங்கிவரும் ஐ.பி.ஏ. அமைப்பானது, பதிப்புத்துறையில் சுதந்தரத்தை உறுதிசெய்வதையும் பதிப்புரிமைகளைக் காப்பதையும் தன் குறிக்கோள்களாகக் கொண்ட அமைப்பாகும்.
ஐ.நா. சங்கம் போல அது ஒரு சர்வதேச பிரதிநிதித்துவ அமைப்பாகும். பல நாடுகளில் உள்ள அந்தந்த நாட்டின் பதிப்பாளர்கள் சங்கங்களின் பன்னாட்டு கூட்டமைப்பே ஐ.பி.ஏ. உலகின் மிக முக்கியமான பதிப்பாளர்கள் அதன் தலைமைப் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். தற்போதையத் தவைவர் குவான்சா ஜபாவா ஜார்ஜியாவைச் சார்ந்த ஒரு பதிப்பாளர்.
இந்த மாநாட்டில் கருத்துரிமை சார்ந்த விருதான ஏபிஐ பிரீ வால்ட்டேர் விருது எகிப்து நாட்டில் புறக்கணிப்புக்குள்ளான பதிப்பாளரான யேகியா பெக்ரிக்கு வழங்கப்பட்டது. பதிப்புத்துறையில் புத்தாக்கம் (IPA Innovation in Publishing Award) விருது பிரிட்டனைச் சார்ந்த ஷிம்ர் ஏஐ நிறுவனத்துக்கும், இந்தியாவில் சென்னையிலிருந்து இயங்கும் எங்கள் ஐலேசா (Ailaysa) நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டது. உலக மொழிகளில் பதிப்புத்துறையை விரிவாக்கம் செய்வதற்கு ஐலேசா உதவுகிறது.
நூல்களோடு உரையாட அதன் மற்றொரு செயலியான Chai Reader உதவுகிறது. சர்வதேசப் பதிப்புத்துறையில் கவுரவமிக்க விருது ஒன்றை, ஐ.பி.ஏ. தலைவர் குவான்சா ஜபாவாவிடமிருந்து 500க்கும் மேற்பட்ட உலகப் பதிப்பாளர்களின் முன்னிலையில் பெற்றுக்கொண்ட அத்தருணத்தில், மொழிகளின் சமத்துவத்துக்கான எங்கள் தொடர்ச்சியான முன்முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று நான் உணர்ந்தேன்.