

தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருக்கின்றன. இந்த விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தில் அல்லாமல், குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு என்கிற கண்ணோட்டத்தில் அணுகுவது அவசியமாகிறது.
கவலை அளிக்கும் தரவுகள்
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகள் வெளிப்படுத்துகின்றன. 2020இல் போக்சோ சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் 3,090; பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,143; 2024இல் பதிவான வழக்குகள் 6,969; பாதிக்கப்பட்ட குழந்தைகள் 7,144. குற்றங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 126% அதிகரித்துள்ளது.
சராசரியாக மாதம் 595; நாள்தோறும் 20 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரம் முதல் இடம் (9,432); உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடம் (8,087); தமிழ்நாடு மூன்றாம் இடம்.
குற்ற விகிதத்தைப் பொறுத்தவரை முதலிடத்தில் கேரளம் இருக்கிறது (48). சிக்கிம் இரண்டாம் இடம் (36.7), மூன்றாம் இடத்தில் மிசோரம் (36.4) உள்ளன. தமிழ்நாடு நான்காம் (33.7) இடத்தில் உள்ளது. எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழ்நிலை இருப்பது தெளிவாகிறது.
2024இல் தீர்வு காணப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய குழந்தைகள் 5,359; இதில் 94% பேர் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள்; 12 முதல் 16 வயதுக்கு உட்பட்டோர் 38%; 16 முதல் 18 வயதுக்கு உபட்டோர் 56%. பாதிக்கப்பட்டவர்களில் 98.6% பெண் குழந்தைகள். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களில் 99.6% குழந்தைகளுக்கு மிகவும் தெரிந்த நபர்கள் - குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள்.
அதே ஆண்டில் 12,526 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 10,200 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றங்களில் தீர்வு காணப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 5,104 பேரில் 1,698 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 3,406 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தண்டனை வெறும் 33% மட்டுமே.