

இந்தக் காட்சி மாற்றத்தை இந்திய அரசு எதிர்பார்க்கவில்லை. ஆகவே ஓர் இடைவேளையை அறிவித்திருக்கிறது. கலங்கித் தெளியட்டும் என்று அரசு கருதியிருக்கலாம். பிப்ரவரி 6ஆம் நாள் இந்திய - அமெரிக்கக் கூட்டறிக்கை வெளியானது. விரிவான ஒப்பந்தம் (Bilateral Trade Agreement) இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
அது குறித்த பேச்சுவார்த்தை பிப்ரவரி 23ஆம் நாள் தொடங்குவதாக இருந்தது. ஆனால், பிப்ரவரி 20இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு ஆட்டத்தை மாற்றிப் போட்டுவிட்டது. ஆகவே, பேச்சுவார்த்தையைக் கால வரையறையின்றி ஒத்திவைத்திருக்கிறது இந்திய அரசு. இந்த இழுபறி இனி என்னவாகும்? இந்த வினாவுக்கு விடை காண, நாம் இந்த வணிகப் போர் தொடங்கிய இடத்துக்குப் போக வேண்டும்.
வரியும் எதிர் வரியும்
இந்தியா, அமெரிக்கப் பொருள்கள் மீது சராசரியாக 17% வரி விதித்துவந்தது; அமெரிக்கா விதித்துவந்த சராசரி வரி 3.3%தான். பொதுவாக, வளர்ந்த நாடுகள் விதிக்கும் வரி குறைவாகத்தான் இருக்கும். டிரம்ப், இந்த முறை அதிபராகப் பதவியேற்றதும், இதை மாற்றப்போவதாக அறிவித்தார். மற்ற நாடுகள் அமெரிக்காவின் மீது விதிக்கும் வரிக்கு நிகராக, அந்த நாடுகள் மீது அமெரிக்காவும் வரி விதிக்கும் என்றார்.
இதற்காக அவர் சூட்டிய பெயர்தான் ‘எதிர் வரி’ (reciprocal tariff). 180 நாடுகள் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாள் அவர் அதிக வரிகளை விதித்தார். இதில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி 26%. பல நாடுகளும் இந்த எதிர் வரியைக் குறைக்குமாறு கோரின. டிரம்ப் இணங்கினார்.
வரிகளைத் திருத்தினார். புதிய வரிகளை ஜூலை 30இல் அறிவித்தார். பல நாடுகளின் மீதான எதிர் வரிகள் குறைந்தன. ஆனால், இந்தியாவின் மீதான வரி 1% மட்டுமே குறைந்து, 25% ஆகியது. அதற்கு அடுத்த வாரம், இன்னொரு பேரிடியை டிரம்ப் இறக்கினார். ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதால், இந்தியாவின் மீது மேலதிகமாக 25% தண்டம் (fine) விதித்தார். மொத்த வரி 50% ஆகியது.
உடன்படிக்கையும் நிபந்தனைகளும்
இந்தியாவுக்கு அமெரிக்க வணிகம் முக்கியமானது. அது நமது மொத்த வணிகத்தில் 18% ஆகும். இந்தியா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் பின்னலாடைகள், வேதியியல் பொருள்கள், மின்னணுப் பொருள்கள், தோல் பொருள்கள், ரத்தின-வைரக் கற்கள், மோட்டார் பாகங்கள் முதலானவை அடங்கும். இந்த வணிகர்கள் கதிகலங்கிப் போயினர்.