

கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலத் தேர்தல்களின் முடிவுகள், சில முக்கியமான பாடங்களை அரசியலர்களுக்கு உணர்த்தியிருக்கின்றன. அரசு நிர்வாகத்தைச் சரியான திசையில் கொண்டுசெல்லுதல், விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.
வீழ்த்தப்பட்ட தீதி!
மேற்கு வங்கத்தில் மிகச் சரியாகத் திட்டமிட்டு வெற்றிக் கனியைப் பறித்திருக்கிறது பாஜக. மொத்தம் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் 2016 தேர்தலில் மூன்றே இடங்களில் வென்ற பாஜக, 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றியது.
இந்த முறை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசை வீழ்த்தி ஆட்சியையே கைப்பற்றியிருக்கிறது. 15 ஆண்டு கால திரிணமூல் காங்கிரஸ் அரசு மீதான முக்கியக் குற்றச்சாட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினைதான்.
அதைச் சரியாக அறுவடை செய்திருக்கிறது பாஜக. பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மம்தா அரசு மீது எதிர்மறை பிம்பத்தை உருவாக்கின. ஆர்.ஜி.கர் பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கைக் கையாண்ட விதம் மம்தா அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
தொகுதி வரையறை மசோதாவுடன் தொடர்புடையதாக முன்வைக்கப்பட்ட பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, திரிணமூல் காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் தோற்கடித்ததாக பாஜக முன்னெடுத்த பிரச்சாரம் கணிசமாகக் கைகொடுத்திருப்பதாகப் பேசப்படுகிறது.
மம்தா அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவிய அதிருப்தியும் பாஜகவுக்குச் சாதகமாகத் திரும்பியிருக்கலாம் எனப் பேசப்படுகிறது. பாஜக ஆட்சி அமைந்த 45 நாள்களுக்குள், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்றும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் பாஜக முன்வைத்த பிரச்சாரம் பலன் தந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது.
பள்ளி ஆசிரியர்கள் நியமன ஊழல் விவகாரம் மம்தாவுக்கு அவப்பெயர் பெற்றுத்தந்தது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராகவும், வக்ஃப் தொடர்பான சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு எதிராகவும் இயன்றவரை போராடிப் பார்த்த மம்தாவுக்கு அவற்றில் வெற்றி கிட்டவில்லை.
சிறுபான்மை வாக்காளர்களை, குறிப்பாக எல்லை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்கள், புலம்பெயர்ந்த சமூகத்தினரின் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், முன்பு அந்த வாக்குகளை அறுவடை செய்துவந்த மம்தாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.