ஒரு கோபுரத்தின் கதை
கோபுரங்களுக்குக்கூட கதை உண்டா எனக் கேட்கலாம். எல்லாக் கோபுரங்களுக்கும் கதை இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், சில கோபுரங்களின் கதைகள் கல்வெட்டுகளாகக் கண்முன் வளர்கின்றன. பைஞ்ஞீலிக் கோபுரத்தின் கதை மூன்று கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது.
ஒரு கோயிலின் நுழைவாயிலும் அதன் மேலெழும் கட்டுமானமும்தான் கோபுரம். பலர் இறைவன் உள்ள கருவறைக் கட்டுமானத்தை கோபுரம் என அழைக்கிறார்கள்.
அந்த அமைப்புக்கு விமானம் என்று பெயர். ‘திருப்பைஞ்ஞீலி’ என்று திருவுடன் இணையும் பைஞ்ஞீலி கிராமம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது. முதல் ராஜராஜன் காலந்தொட்டுக் கல்வெட்டுகள் பெற்று விளங்கும் இக்கோயில், தேவார மூவரால் பாடப்பெற்றது. வீதிகளையும் சேர்த்து இக்கோயில் நான்கு சுற்றுகளைக் கொண்டுள்ளது. இக்கோயிலின் மூன்றாம் சுற்றில் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக் குடைவரைக் கோயில் உள்ளது.
தென்தமிழ்நாட்டிலுள்ள இரண்டே சோமாஸ்கந்தர் குடைவரைகளில் இது ஒன்று. தமிழ்நாட்டின் சிறப்புக்குரிய இக்குடைவரையில் மட்டும்தான் உமையன்னை வலப்புறமும் சிவபெருமான் இடப்புறமுமாய் இடையில் குழந்தை முருகனுடன் அமர்ந்துள்ளனர். வேறெந்தக் குடைவரையிலும் இந்த இட, வல மாற்றம் இல்லை.
இந்தச் சுற்றின் வாயிலாக கோபுரம் ஒன்றமைக்கச் சோழர் கால மக்கள் விரும்பினர். அதற்கான பணி மூன்றாம் குலோத்துங்க சோழர் ஆட்சியில் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்றது. திரிபுவன வீரதேவராகக் கல்வெட்டுகள் கொண்டாடும் இம்மூன்றாம் குலோத்துங்கன், அப்பெயரிலேயே கும்பகோணம் அருகில் உருவாக்கிய திரிபுவன வீரேசுவரம் கோயிலின் முதற்கோபுரம் போலவே, பைஞ்ஞீலி கோபுரமும் கட்டப்பட்டது.
