

விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் கொள்கை வடிவமைப்பை ஆதாரபூர்வமாக மாற்றியமைத்ததில் ‘தேசிய மாதிரி ஆய்வு’ (National Sample Survey) முக்கியப் பங்கு வகித்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் சாதனைகளையும் எதிர்காலச் சவால்களையும் மீள்பார்வை செய்வது அவசியமாகிறது.
தரவுகளற்ற தொடக்கம்: விடுதலைக்குப் பின்னர், புதிதாக உருவான நாடு என்கிற வகையில் இந்தியா எதிர்கொண்ட அடிப்படைச் சவால்களில் ஒன்று, நம்பகமான - விரிவான புள்ளிவிவரத் தரவுகளுக்கான பற்றாக்குறை. பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, சமூக நலன் போன்ற முக்கிய அரசுக் கொள்கைத் தீர்மானங்களை ஆதாரங்களின் அடிப்படையில் எடுப்பதற்குத் தேவையான தரவுகள் இல்லாத நிலையில், திட்டமிடல் பெரும்பாலும் அனுமானங்களை மட்டுமே சார்ந்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான், 1949ஆம் ஆண்டு பேராசிரியர் பி.சி.மகலானோபிஸ் தலைமையில் தேசிய வருமானக் குழு அமைக்கப்பட்டது. ‘இந்தியப் புள்ளியியலின் தந்தை’ என அழைக்கப்படும் மகலானோபிஸ், இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியமான பகுதிகள் - குறிப்பாக, முறைசாராத் தொழில்கள் (unorganised sectors), குடும்பம்சார் தொழில்கள் (Household sectors) புள்ளிவிவரரீதியாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே, முறையான மாதிரி ஆய்வுகள் அவசியம் எனக் குழு பரிந்துரைத்தது.
ஆதாரபூர்வ ஆட்சியின் தொடக்கம்: அந்தப் பரிந்துரையின் விளைவாக உருவானதே தேசிய மாதிரி ஆய்வு (NSS) நிறுவனம். 1950 அக்டோபர் முதல் 1951 மார்ச் வரை நடைபெற்ற முதல் தேசிய மாதிரி ஆய்வுச் சுற்று, பெரும்பாலும் கிராமங்களை மையமாகக் கொண்டு குடும்ப நுகர்வுச் செலவு, வேளாண்மை, கால்நடை, குடும்பத் தொழில்கள், நிதி அணுகல் போன்ற பல்வேறு சமூக – பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியது.
இந்த முயற்சி, இந்தியாவில் ஆதாரபூர்வமான கொள்கை வடிவமைப்புக்கான ஒரு புதிய பாதையைத் திறந்தது. அதன் பின்னர், அரசுத் திட்டங்கள் ஊகங்களின் அடிப்படையில் அல்லாமல், தரவுகளின் அடிப்படையில் உருவாகத் தொடங்கின.
கடந்த 75 ஆண்டுகளில், தேசிய மாதிரி ஆய்வு இந்திய அரசின் கொள்கை இயந்திரத்தின் மையமாகவே செயல்பட்டு வந்துள்ளது. முந்தைய ஐந்தாண்டுத் திட்டங்கள், வறுமை மதிப்பீடுகள், ஊட்டச்சத்து நிலை, வேலைவாய்ப்புப் போக்குகள், நுகர்வு முறை மாற்றங்கள் - இவை அனைத்துக்கும் என்.எஸ்.எஸ்சின் தரவுகள் அடித்தளமாக இருந்தன.