

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் ஏறக்குறைய 8 ஆணவக் கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற குரல் நீண்ட காலமாக ஒலித்துவருகிறது.
அத்தகைய சட்டம் இயற்றப்படுவதை வரவேற்கும் அதேவேளையில், அதை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்தும், சட்டங்களுக்கு அப்பால் செய்யப்பட வேண்டியவை குறித்தும் விவாதிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
வழக்குகளின் விவரம்
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க, கடந்த ஆட்சியில் நீதியரசர் கே.என்.பாஷா தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், கடந்த ஆறு மாதங்களாக அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிந்து, அதற்கான காரணிகளை ஆராய்ந்து, புதிய சட்டங்களை இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் பரிசீலித்து வருகிறது.
ஏற்கெனவே 37 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள, சிறப்பான சட்டம் என்று கருதப்படுகிற - ‘பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989’-இன் நிலை மிகுந்த கவலை அளிப்பதாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் 2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில், 3.6 சதவீதத்தினர் மட்டுமே இச்சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றுள்ளனர்; 11,117 குற்றவாளிகளில் 406 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வன்கொடுமைகள் 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக அதிகரித்துள்ளன. நீதிமன்றங்களில் 494 வழக்குகள் விசாரணையிலும் 3,810 வழக்குகள் நிலுவையிலும் உள்ளன.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்று சொல்லப்பட்டாலும் அது வன்கொடுமைகளைத் தடுப்பதில்லை; வன்கொடுமை நிகழ்ந்த பிறகு, அதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்வது, தண்டனை அளிப்பது; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது என்கிற அளவில்தான் அது செயல்படுத்தப்படுகிறது.
இருப்பினும் இச்சட்டத்தின்கீழ் இந்திய அளவில் 20 முதல் 32 சதவீதம்தான் (2015 - 2025) தண்டனை பெற்றுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் 90% அளவிலான வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. விசாரணை முடிக்கப்பட்ட 70 முதல் 75 சதவீத வழக்குகளில், பல்வேறு காரணங்களால் தண்டனை கிடைப்பதில்லை.