

சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் சுனாமியால் குறைந்துவரும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மீட்டு, எழுத்து வடிவிலான அறிவுசார் மரபைப் பாதுகாக்க நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த திசைவழியில் சிங்கப்பூர் சுவாரசியமான ஒரு வழியைக் காட்டுகிறது.
வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகச் சிங்கப்பூர் புதிய ஐந்தாண்டு தேசிய வாசிப்பு இயக்கத்தைத்தொடங்கியுள்ளது. இதில் அரசாங்க இணையதளத்தில் தங்களின் வாசிப்பு நிமிடங்களைப் பதிவு செய்யும் குடிமக்களுக்குச் சிறிய அளவிலான பண வெகுமதிகள் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றன.
ஒரு சிங்கப்பூர் டாலரை (சுமார் ரூ.75) சம்பாதிக்க 50 வாசிப்பு அமர்வுகள் (பயிற்சிகள்) தேவை. 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வாசிப்பு அமர்வுக்கு வாசகர்கள் 20 மெய்நிகர் நாணயங்களை (virtual coins) ஈட்டுவர். ஒரு டாலர் பணத்தைப் பெற வாசகர்கள் 1,000 நாணயங்களைச் சேகரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வாசிப்பு அமர்வை மட்டுமே பதிவு செய்ய முடியும்.