

பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தைப் பற்றி மீண்டும் ஒரு சர்ச்சை. இம்முறை சர்ச்சையை எழுப்பி கொதித்தெழுந்தது உச்ச நீதிமன்றம். சர்ச்சைக்குரிய பாடத்தை மட்டுமல்ல, அதை உள்ளடக்கிய பாடப் புத்தகத்தையே கைப்பற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட கட்டுரையை பாடத் திட்டத்துக்குள் சேர்த்த நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த்.
ஏன் இந்த எதிர்வினை? மத்திய இடைக்கல்வி வாரியம் எட்டாவது வகுப்புக்கான பாடப் புத்தகத்தில் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய தலைப்பில் ஒரு கட்டுரையை சேர்த்துள்ளது.
அக்கட்டுரையில் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று ஒரு பகுதியும், மேனாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறிய கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தலைமைப் பதவியேற்ற நீதிபதி சூர்யகாந்த் ஒரு கூட்டத்தில் பேசும்போது தாமதிக்கப்பட்ட நீதி அழிக்கப்பட்ட நீதி என்று புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
மத்திய இடைக்கல்வி வாரியத்தின் பாடப் புத்தகங்களை கல்விக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தயார் செய்து வருகிறது. ஆனால் இதுவரை இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை நீதிமன்றம் மேற்கொண்டதில்லை. நீதித்துறையை தவறாக சித்தரித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதா என்று பதட்டமடைந்துள்ளார்கள்.
இதற்கு முன்னும் என்.சி.இ.ஆர்.டி தயாரித்த பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள் பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளன. அரசியல் அமைப்புச் சட்டம் தயார் செய்வதில் தாமதமாவதைப் பற்றி சங்கர் என்பவர் வரைந்த கேலிச்சித்திரப் படம் பள்ளி மாணவர்களுக்கான புத்தகத்தில் இடம் பெற்றது. அப்படத்தில் நத்தை மீது அம்பேத்கர் உட்கார்ந்து மெதுவாக செல்வதைக் கண்டித்து பண்டித நேரு சாட்டையை சொடுக்குவது போல் காட்சி.
அரசமைப்புச் சட்டம் தயாரிப்பதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆனாலும் அதற்கான தாமதத்துக்கான காரணத்தை அம்பேத்கர் மீது சுமத்துவது தவறு மட்டுமல்ல, அதை மாணவர்களுக்கான பாடத்தில் வைப்பது தீங்கான செயல் என்று ஆட்சேபணை எழுந்தவுடன், அந்தக் கேலிச்சித்திரம் நீக்கப்பட்டது.
அதேபோல் மக்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் தமிழகத்தின் நாடார் இன மக்கள் 100 ஆண்டுகளில் எழுச்சி பெற்றதைப் பற்றிய கட்டுரையில் அவர்கள் தொடக்கத்தில் தீண்டத்தகாதவர்களாக இருந்ததை குறிப்பிட்டு வெளிவந்த பாடத்தையும் எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து பெரிய எதிர்ப்புக் குரல் கிளம்பியவுடன் அந்தப் பாடமும் நீக்கப்பட்டது.
ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் புத்தகத்தையே அழிக்கவில்லை. மாறாக, சர்ச்சைக்குள்ளான படம் மற்றும் பாடம் இரண்டிலும் மேல் ஒரு காகித்தை ஒட்டி மறைத்து வெளியிடும்படி கூறப்பட்டது. கட்டுரை எழுதியவர்கள் மீது நடவடிக்கை என்று தீவிரம் காட்டப்படவில்லை. என்.சி.இ.ஆர்.டி என்ற பாடத்திட்ட அமைப்பு கல்வி நிபுணர்களைக் கொண்டது. மாணவர்களுக்கு எத்தகைய பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும், அதற்கான பாடப்புத்தகங்களில் என்னென்ன உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.
கல்வி நிபுணர்களை உள்ளடக்கிய பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவுகளில் தலையிட மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் மைசூர் பல்கலைக்கழக வழக்கில் தீர்ப்பளித்தது (1963). பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) திடீரென்று ஜோதிட அறிவியல் என்ற பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியது. ஜோதிடத்துக்கும் அறிவியலுக்கும் காத தூரம் என்று வழக்கு தொடரப்பட்டது. பார்கவா என்ற விஞ்ஞானி தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவார்ந்த நபர்கள் உள்ள அமைப்புகளின் சுயாட்சி அதிகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறியது (2004).
ஒரு பக்கத்தில் கல்விக் கொள்கைகளில் தலையிட மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பினும் உயர் நீதிமன்றங்கள் மாற்று திசையில் சென்றன. கல்வி நிலையங்களில் நாகரீக ஆடை அணிவகுப்புக்கு தடை, அலைபேசிகளுக்குத் தடை, மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு என்றெல்லாம் தடைவிதிக்க தொடங்கின. இது போதாதென்று கல்வித் திட்டத்தில் மனித உரிமைக் கல்வி, பாலியல் கல்வி, திருக்குறளை கட்டாயமாக போதிக்க வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டன.
ஒரு சென்னை நீதிபதி பள்ளிகளில் கட்டாயமாக வந்தே மாதரம் பாட வேண்டுமென்று உத்தரவிட்டார். அவரது உத்தரவு ரத்து செய்யப்பட்ட போதும் தற்போது ஒன்றிய அரசு அதே உத்தரவை வெளியிட்டுள்ளது.
திருக்குறளை போதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதில் காமத்துப்பால் பகுதியை பள்ளி மாணவர்கள் படிக்கலாமா என்ற கேள்விக்கான பதிலை முடிவு செய்ய வேண்டியது கல்வி நிபுணர்களேயொழிய நீதிமன்றமல்ல. இன்னொரு பக்கத்தில் மாணவருக்கான பாடச்சுமையை அதிகரித்து பெரிய புத்தக மூட்டைகளை சுமந்து செல்வதனால் அவர்களது உடல்நலம் பாதிக்கிறது என்று கூறி முன்னாள் யு.ஜி.சி. தலைவர் யஷ்பால் தலைமையில் குழு அமைத்து ஆராய்ந்தது. அவர் பள்ளி மாணவர்கள் சுமையற்ற கல்வி கற்பதற்கான அறிக்கையை சமர்ப்பித்தார் (1993).
அதையொட்டி என்.சி.இ.ஆர்.டி வெளியிட்ட 2020-க்கான கல்விக் கொள்கையில் மாணவர்களின் புத்தகச் சுமை வகுப்புக்கு ஏற்ப எடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சினைகளிலெல்லாம் நீதிமன்ற தலையீடு வரவில்லை. குழந்தைகளின் நலம் என்ற ஒரே எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. ஆனால் தற்போது குழந்தைகள் நீதித்துறையின் தவறுகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற என்.சி.இ.ஆர்.டி நிபுணர்கள் குழு எடுத்த முடிவு பற்றி எழுந்துள்ள எதிர்வினைகள் அதற்கான விகிதாச்சாரத்தில் இல்லாமல் ஆத்திரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கு முயற்சி எடுத்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதையொட்டி கருத்து தெரிவித்ததுடன், பல்லாயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுடன் நேரடியான கடிதப் போக்குவரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் (2013). அவற்றுக்கான மையக்கருத்தாக ஊழலை ஒழிப்பதற்காக முக்கிய வழிகாட்டிகள் பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் என்று குறிப்பிட்டார்.
அது தவிர குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் ஊழலில் ஈடுபட வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதுதான் முறையான வழி என்றால் பள்ளிக் குழந்தைகளுக்கு நீதித்துறையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிக் கூறுவதில் தவறு ஏதும் இருக்க முடியாது.
நீதித்துறை பற்றி சர்ச்சைக்குரிய பாடத்தை பள்ளி மாணவர்களுக்கு போதிக்க முற்பட்டது திட்டமிட்ட செயல் என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.
மேலும் பள்ளி மாணவர்கள் என்னவெல்லாம் கற்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆளுக்கொரு உத்தரவை போட்டது மட்டுமின்றி கர்நாடக மூன்று நீதிபதிகள் அமர்வு இசுலாமியப் பெண் குழந்தைகள் தலைக்குட்டை (ஹிஜாப்) அணிந்துவரக் கூடாது என்று போட்ட அரசு உத்தரவு சரி என்று தீர்ப்பளித்தனர்.
அதையெதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் மாற்றுக் கருத்து தெரிவித்ததனால் அவ்வழக்கை வேறொரு அமர்வுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஆண்டுகள் மூன்றாகியும் இன்னும் புதிய அமர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் கிட்டத்தட்ட 20,000 பெண் குழந்தைகள் பள்ளி இறுதித் தேர்வை எழுத முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.
மாணவர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் 1963-ல் உச்ச நீதிமன்றம் மைசூர் பல்கலைக்கழக வழக்கில் கூறிய தீர்ப்பின்படி நடக்க வேண்டும். கல்வி நிபுணர்கள் அடங்கிய குழுவின் அறிவார்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்ற உத்தரவின்படி நடக்க முற்பட வேண்டும். என்.சி.இ.ஆர்.டி என்ற அமைப்பும் பள்ளிக் கல்வி திட்டத்துக்காக ஏற்பட்டது. மாறாக அவர்கள் மீதே நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்வது சீழ் வழியும் புண்ணின் மேல் பட்டுத்துணியைப் போட்டு மூடுவது போன்றதுதான்.
பிரச்சினைக்குரிய பாடத்தை அழித்துவிட்டு புத்தகங்களைப் பயன்படுத்த விடாமல் மூன்று லட்சம் புத்தகங்களை கைப்பற்றி அழிக்க முற்படுவது முறையான செயல் அல்ல. எதிர்வினை புரிவதற்கும் முறையான எதிர் விகிதாச்சாரம் தேவை.
கட்டுரையாளர்: கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்