

தமிழ்நாட்டில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்பு, அந்த உரிமைகள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கான உயிரோட்டமுள்ள சான்றாக மாறியிருப்பது சமகால அவலங்களில் ஒன்று.
இந்தியாவில், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம் – 2005 இயற்றப்பட்டது; இதையடுத்து, மாநில அளவில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் (SCPCR) அமைக்க வழிவகுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2013இல் தமிழ்நாடு மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (TNSCPCR) செயல்படத் தொடங்கியது. தாமதமாக உருவாக்கப்பட்டது மட்டுமல்லாமல், தொடக்கத்திலிருந்தே போதிய தன்னாட்சி, மனிதவளம், உள்கட்டமைப்பு, நிதி, அதிகாரம் இல்லாத நிலையில் இந்த ஆணையம் பெயரளவுக்குச் செயல்பட்டு வருவது மிகுந்த கவலைக்குரியது.
கேள்விக்குறியான தன்னாட்சி
தமிழ்நாடு மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சட்டப்படி மிகுந்த அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பு. ஆனால் நடைமுறையில் அது அதிகாரம் இழந்த, தன்னாட்சி இல்லாத, சமூகப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் சிக்கிய ஒரு பெயரளவு அலுவலகமாகவே செயல்பட்டுவருகிறது.
நடைமுறையில் ஒரு சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பாக ஆணையம் செயல்படவில்லை. உறுப்பினர் செயலர், பணியாளர்கள் ஆகிய அனைவரும் தலைவரையும் உறுப்பினர்களையும் கட்டுப்படுத்துவதால், அவர்களால் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலை தொடர்கிறது.
இந்தியா 1992இல் ஐ.நா. குழந்தை உரிமைகள் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டது. அதன்படி குழந்தைகளின் வாழ்வு, பாதுகாப்பு, வளர்ச்சி, பங்கேற்பு ஆகியவற்றுக்கான உரிமைகளை உறுதிசெய்வது அரசின் கடமை.
ஆனால், அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஆணையமே செயலற்ற நிலையில் இருப்பது, அரசின் கடமையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் தலைமைச் செயலருக்கு (Chief Secretary) இணையான ஊதியம் ஆணையத் தலைவருக்கு, வழங்கப்படுகிறது.