

பாஸ்கரன்
நாடு முழுவதும் பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதும், புதிதாகத் தனியார் பள்ளிகள் திறக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
ஒப்பீட்டளவில் இப்படிப்பட்ட அவல நிலை தமிழகத்தில் இல்லை என்றாலும், இங்கும் சில பள்ளிகளின் மூடல் நடந்துள்ளது. நடப்புக் கல்வியாண்டில் நீலகிரி மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக ஒரு மாணவரும் சேரவில்லை. இவற்றில் 20 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. இதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்து இருக்கிறார்.
உந்து சக்தி
கவலையளிக்கும் இந்தப் பின்னணியில்தான், தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வெற்றிகரமான அந்தப் பள்ளிகளின் அனுபவம் பிற பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய உந்துசக்தியாகத் திகழ்கிறது.
எடுத்துக்காட்டாக, புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தான்கோட்டை மேற்கு கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைப் பார்க்கலாம். 1936இல் ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, 1982இல் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் 2014இல் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 82. இப்போது 300 (ஆண்கள் 154, பெண்கள் 146).
இது எப்படி நடந்தது? ஆசிரியர் எஸ்.பாஸ்கரனும் சக ஆசிரியர்களும் மேற்கொண்ட ஆக்கபூர்வமான முயற்சிகளே காரணம். பாஸ்கரன் இப்பள்ளிக்கு 2014இல் மாற்றலாகி வந்தார்.
மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக வீடு வீடாகச் சென்று பெற்றோர்களைச் சந்தித்து, “ஏன் உங்கள் பிள்ளைகளை நம் ஊர்ப் பள்ளியில் சேர்க்கவில்லை?” என்று கேட்டிருக்கிறார்.
பலர், “பக்கத்து வீட்டுக் குழந்தை தனியார் பள்ளிக்கு வேனில் போய்வருகிறது. என் குழந்தை ஒன்றரை கிலோமீட்டர் நடந்து போக வேண்டுமா?” என்று திருப்பிக் கேட்டார்கள்.