

நம் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அவை முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா, குழந்தைகள் புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்டுகிறார்களா என்கிற கேள்விகளுக்குப் பதில் தேடும் தருணம் இது.
சிந்தனை ஊற்று
அறிதலின் இன்பத்தை உணரவைப்பதில் நூல்களுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. எவ்வளவு அதிநவீன எண்ணிலக்கக் கருவிகள் வந்தாலும், ஒரு நூல் தரும் இன்பத்தைக் கொடுக்க முடியாது. நூல் வாசிப்பைப் பள்ளிப் பருவத்தில் விதைக்கப் பள்ளி நூலகம்தான் சரியான இடம்.
நூலகம் என்பது வெறும் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு அல்ல. நூல்கள் மனித குலத்தின் அறிவுச்சேகரம். மனிதகுலம் இயற்கையைப் பற்றி ஆராய்ந்து சொன்ன உண்மைகளைப் பேசும் அறிவியலும், மனித சமூகத்தின் மேன்மைக்கான உண்மைகளைப் பேசும் சமூக அறிவியலும் மனித உறவுகளின் நெருக்கடிகளைக் கண்முன்னே காட்சிகளாக்கி மனதை ஆற்றுப்படுத்தும் உளவியல் சிகிச்சைகள்.
மனிதர்கள் சோர்வுறும்போதெல்லாம் கனவுகளையும் லட்சியங்களையும் இலக்குகளையும் தோற்றுவிக்கும் எழுத்து ஊற்று. குழந்தைகளிடம் அடிப்படைக் கல்வியறிவைப் பாடத்திட்டம் உருவாக்குகிறது என்றால், அவர்களின் சிந்தனையைச் செதுக்குவதில் பள்ளி நூலகம் மிக முக்கியமானது.
அவர்களின் அறிவுத்தேடலைத் தூண்டுவதிலும் எதிர்கால இலக்குகளை நிர்ணயிப்பதிலும் ஆளுமையை வளர்ப்பதிலும் பள்ளி நூலகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நூலகங்கள் பள்ளிகளில் எப்படி இருக்கின்றன?
தனி இடம் வேண்டும்
வகுப்பறைகளுக்கு நடுவில் ஓர் அறை அல்லது கட்டிடத்தின் மூலையில் ஓர் அறை. அந்த அறை பெரும்பாலும் பூட்டப்பட்டிருக்கும். தலைமையாசிரியர் அல்லது தமிழாசிரியர்களே அந்த நூலகப் பொறுப்பையும் சேர்த்துப்பார்க்க வேண்டும். அவர்களுடைய மற்ற பணிச்சுமைகளில் நூலகம் கடைசி இடத்தையே பிடிக்கும்.
வகுப்பறைகளுடன் இருப்பதால் அந்த நூலகம் இன்னொரு வகுப்பறையாகவே குழந்தைகளுக்குத் தோன்றும். எனவே, வகுப்பறைகளுக்கு நடுவிலோ இடையிலோ நூலகம் இருக்கக் கூடாது. பள்ளி வளாகத்தில் தனிக் கட்டிடத்தில் நூலகம் இருப்பது குழந்தைகளுக்குக் கூடுதல் மன அமைதியைத் தரும். அதேபோல ஆசிரியர்கள் நூலகர்களாக இருக்கக் கூடாது.