ஓர் ஆட்சியரின் அமைதிப் புரட்சி!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பேர் இம்முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். தாங்கள் மேற்கொள்ளப்போகும் பணியிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பின்பற்றுவதற்கான முன்னுதாரணங்கள் அவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.
கல்வியாளர்கள் இன்றும் நினைவுகூரும் ஒரு பழைய செய்தியும் வெற்றியாளர்களுக்குப் பயன்படக்கூடும். 2011ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ஈரோடு மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் ஆர்.ஆனந்த குமார், தனது மூத்த மகள் ஆறு வயது கோபிகாவை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சேர்த்தார். ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் அருகில் இருந்த அந்தப் பள்ளிக்குத் தன் மனைவி, குழந்தையுடன் அவர் வந்ததைக் கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.
ஒரு புன்னகைக்குப் பின்னே...
பள்ளித் தலைமை ஆசிரியர் ராணியையும் ஆசிரியர்களையும் அழைத்த ஆட்சியர், ‘எங்களுக்கு இது அருகமைப் பள்ளி. பொதுப் பள்ளி. அதனால் இங்கு கொண்டுவந்து சேர்க்கிறோம். எல்லாக் குழந்தைகளையும்போல எனது மகள் கோபிகாவும் இங்கேதான் மதியம் சத்துணவு சாப்பிடுவாள். மாவட்ட ஆட்சியரின் மகள் என்கிற சலுகை ஏதும் இருக்கக் கூடாது’ என்று அன்புடன் அறிவுறுத்தினார்.
தகவல் அறிந்த பத்திரிகையாளர்கள் ஆட்சியரைச் சூழ்ந்துகொண்டு, ‘உங்கள் மகளை ஏன் அரசுப் பள்ளியில் சேர்த்தீர்கள்? இதன் பின்னணி என்ன?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். புன்னகை ஒன்றுதான் அவரிடமிருந்து பதிலாக வந்தது.
அரசுப் பள்ளியில்தான் ஒரு குழந்தை, சமூகத்தின் ஆணிவேரை / அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முடியும். மாவட்டத்தின் முதல் குடிமகன் என்பவர் பேச்சளவில் மட்டும் இருக்கக் கூடாது.
