

காலம் செதுக்கிச் செதுக்கிச் சமைத்த மகா சிற்பம் போல் தன் கடைசி நாட்கள் வரை கம்பீரமாக வாழ்ந்தவர் கவிஞர் புவியரசு (1931 – 2026).
என் உயிர்த் துடிப்பு
கவிதை என்பதால்
அதுவே என் உயிரொப்பம்
எனக் கவிதையில் மூழ்கித் திளைத்தவர் புவியரசு. நஸ்ருல் இஸ்லாமின் ‘புரட்சிக்காரன்’ கவிதை மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாதமி விருதை 2007ஆம் ஆண்டு பெற்றார். 2009ஆம் ஆண்டில் ‘கையொப்பம்’ என்ற தன் படைப்பிலக்கிய நூலுக்காக இரண்டாம் முறை சாகித்ய அகாதமி விருது பெற்றார். அரிதாகவே அமைகிற இந்த இரட்டைச் சாதனைக்கு உரியவர் புவியரசு.