

தெரிந்த சிலரிடம், ‘‘ஏன் முன்பு போல நீங்கள் புத்தகங்கள் வாசிப்பதில்லை’’ எனக் கேட்டால், அதற்கு ‘‘ஏதுங்க நேரம். இப்பதான் எல்லாமே மொபைலில் கிடைக்குதே’’ என்று பதிலளிக்கிறார்கள். இது, சரியாகத் தோன்றினாலும், புத்தக வாசிப்பு குறித்த சரியான புரிதல் கொண்டிருக்கவில்லை என்பது விளங்குகிறது. ‘புத்தகங்கள் தகவல் சேகரிப்புக்கும், அறிவு வளர்ப்பதற்கும் மட்டுமல்ல; மூளையின் செயற்பாட்டை அதிகரித்து கட்டமைப்பை மாற்றுகிறது’ என நரம்பணுவியல் சுட்டிக் காட்டுகிறது.
இன்றைக்கு மனிதன் அதிகமாக நேரத்தைச் செலவிடுவது சமூக ஊடகங்களில்தான். துண்டுக் காணொளிகளை (ரீல்ஸ்) ஒரு பதிவிலிருந்து அடுத்த பதிவிற்கு மேலே கீழே நகர்த்துவதால் கட்டை விரலின் பயன்பாடு அதிகமாகி உள்ளது. இதனால் நரம்புகள் விரைவில் பாதிக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.