

அண்மைக் காலமாக, தேசியத் தகுதித் தேர்வு (NET - National Eligibility Test) நடத்தப்படும் முறையாலும், ஆய்வு உதவித்தொகை வழங்கப்படுவதில் நிலவும் குழப்பங்களாலும் பலர் சிரமத்துக்கு உள்ளாகிவருகின்றனர். இதில் மொழி அடிப்படையிலான பாகுபாடு காட்டப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
அடுத்தடுத்த மாற்றங்கள்: இந்தியாவில் கற்பித்தல் பணி, ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒரு சீரான தரத்தை (uniform standard) நிர்ணயிப்பதற்காக 1989-1990ஆம் கல்வி ஆண்டில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்வுதான் தேசியத் தகுதித் தேர்வு. கல்லூரியில் பணியாற்றுவதற்கும் அரசுப் பணி பெறுவதற்கும் இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 1989 முதல் 2014 வரை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இத்தேர்வை நடத்திவந்தது.
2014 முதல் 2018 வரை இத்தேர்வை நடத்தும் பொறுப்பை இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஏற்றுக்கொண்டது. இவ்வமைப்பு தேர்வு முறையில் சில மாற்றங்களைச் செய்தது. தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும் தேர்வில் துல்லியத் தன்மையைக் கொண்டுவரவும் மூன்று தாள்களும் கொள்குறி வகையில் ஓஎம்ஆர் தாளில் நடத்தப்பட்டன. 2018 முதல் இத்தேர்வை நடத்தும் பொறுப்பைத் தேசியத் தேர்வுகள் முகமையிடம் (National testing agency) ஒப்படைத்தது மத்திய அரசு.
இந்த அமைப்பும் நெட் தேர்வில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தது; மூன்று தாள்களாக இருந்த தேர்வை இரண்டு தாள்களாக மாற்றியது. பொதுத்தாள் 100 மதிப்பெண்; இரண்டாம் தாள் 200 மதிப்பெண். இரண்டு தாள்களும் ஒரே நேரத்தில் கணினி அடிப்படையில் (Computer Based Test) நடத்தப்பட்டு, தேர்வு எழுதிய ஒரு மாதத்துக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஒட்டுமொத்தமாக இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தையும் தேசியத் தேர்வுகள் முகமை மாற்றியமைத்தது. தேர்ச்சி விகிதமும் ஒரே சீரான தன்மையில் மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட ஒரு பாடத்துக்குத் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையில் 6% பேர் மட்டுமே உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்படும். இதில் இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் முறையாகப் பின்பற்றப்படும்.