

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஆண்டுக்கான பருவமழை பற்றி அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை, வேளாண் தொழிலைப் பெரிதும் நம்பியுள்ள நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் ஒரு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் எல் நினோ (El Nino) சூழலால், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை அதன் நீண்ட கால சராசரி அளவில் (Long Period Average) 92% மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மொத்த சாகுபடிப் பரப்பில் ஏறக்குறைய 45% வானம் பார்த்த பூமியாக மழையை நம்பி வேளாண்மை செய்யும் நம் நாட்டில், பருவமழைப் பற்றாக்குறை என்பது மிகப் பெரிய பொருளாதார அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் பருவமழையின் அச்சுறுத்தல் இன்றும் நமது வேளாண்மையை ஆட்டிப்படைக்கிறதா?
பருவமழையின் கோலங்கள்
தற்போதைய அச்சத்தைப் புரிந்துகொள்ள, தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியா ஆண்டுக்குச் சராசரியாக 118 சென்டிமீட்டர் மழையைப் பெறுகிறது. மிக முக்கியமாக, நாட்டின் மொத்த மழையில் தென்மேற்குப் பருவமழை (South-West Monsoon) மட்டும் 75% பங்களிக்கிறது.
இந்தச் சூழலில், சராசரி மழையில் 10 சதவீதத்துக்கும் மேலாகப் பற்றாக்குறை ஏற்படும்போது, அது வேளாண் துறையின் வளர்ச்சியில் பெரும் சரிவை ஏற்படுத்துகிறது.
பிரம்மாண்டமான நீர்ப்பாசன வளர்ச்சியால் நாம் மழையைச் சார்ந்திருப்பது குறைந்துவிட்டதாக ஒரு தரப்பினர் நம்பினாலும், கடந்த மூன்று தசாப்தங்களாகத் திரட்டப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு மிகவும் சிக்கலான ஒரு கதையைச் சொல்கிறது.
1990 முதல் 2024 வரையிலான 35 ஆண்டுகளில், இந்தியாவில் 18 முறை இயல்பைவிடக் குறைவான மழையே பெய்துள்ளது. அதாவது, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பருவமழை பொய்க்கிறது.
கடந்த 35 ஆண்டுகளில் 19 ஆண்டுகள், இந்தியாவின் 30 சதவீதத்துக்கும் அதிகமான மாவட்டங்கள் பற்றாக்குறையான பருவமழையையே பெற்றுள்ளன.
ஆண்டுவாரியான மாறுபாடுகளைப் பார்க்கும்போது, ஆறு ஆண்டுகளில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக மழை குறைந்துள்ளது; ஐந்து ஆண்டுகளில் பற்றாக்குறை 5% முதல் 10% வரை இருந்துள்ளது. 35 ஆண்டுகளில் 14 முறை மட்டுமே கூடுதல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.