

கண்ணகி கண்ட துன்பங்கள் பெண்ணினம் காணாதவை. பல நூற்றாண்டுகள் கழிந்தும் அவளுடைய பக்தர்கள் பெரும் ஏமாற்றத்தை அனுபவித்துவருகின்றனர். இந்தியத் துணைக்கண்டத்திலே முன்னுதாரணமில்லா ஒரு தாய்த்தெய்வத்தை விரும்பும்போதெல்லாம் தரிசிக்க முடியாதது கவலை அளிக்கிறது.
தமிழக, கேரள அரசுகள் நினைத்தால் இதற்குத் தீர்வு கிடைத்துவிடும். மலைக்குச் செல்லும் வழித்தடம் மட்டுமே பிரச்சினை. தமிழ்நாடு அரசுகூட அதனளவில் தீர்வு காண இயலும். கண்ணகியின் புராதனக் கோயிலாகிய நெடுவேள்குன்றத்தில் (இன்றைய குமுளி மலை, உள்ளூர் வழக்கில் மங்களாமொட்டை) சித்திரை பெளர்ணமி அன்று ஒருநாள் மட்டுமே கோயில் திறக்கப்பட்டு தரிசிக்க முடியும்.
மற்ற நாள்களில் மூடிக்கிடக்கிறது. இந்த ஆண்டு நானும் தரிசிக்க முடியாமல் திரும்பிவிட்டேன். ஏமாற்றம் என்றாலும், ஓரளவு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கண்ணகியைக் காண எவ்வளவு கூட்டம்.
வியந்துபோனேன். அன்று குமுளியில் பக்தர்களின் வரிசை பல கிலோமீட்டருக்கும் மேல் நீண்டு சென்றது. நடந்து சென்று பார்த்தேன், முடிவைக் காண இயலவில்லை. அவ்வளவு பெரிய வரிசை. அன்று சில ஆயிரம் பக்தர்களாவது பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியிருப்பார்கள். இந்தப் பிரச்சினையை நிச்சயம் தீர்க்க இயலும்.
மலைப்பாதையே சிக்கல்
குமுளி மங்களதேவி மலையில் உள்ள கண்ணகி கோயிலில் பாதி மட்டுமே தமிழகத்துக்குச் சொந்தம்; மறுபாதி கேரளத்துக்குச் சொந்தம். கருவறை கேரளத்தில் உள்ளது. குமுளி பேருந்து நிலையத்தில் இருந்து 12 கி.மீ. மலையேற வேண்டும். ஜீப்பில் செல்வது எளிது.
இந்த வழித்தடம் புலிகள் காப்பகத்தின் வழியே செல்கிறது. இது கேரளத்தின் காட்டுப்பகுதியாகும். அதனால், கேரள அரசு ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை பெளர்ணமி அன்று தரிசனத்துக்கு அனுமதிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஜீப்புகளைக் கேரளத்திலிருந்து ஏற்பாடு செய்கிறார்கள். முழுக்கக் கேரளக் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இது நடக்கிறது.