

கவிஞர், எழுத்தாளர், கதாசிரியர், கட்டுரையாளர், பேச்சாளர், இதழாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி, சமூக, இலக்கியச் சிந்தனையாளர், வணிகர் மற்றும் பொதுத்தொண்டர் எனப் பன்முகம் கொண்ட மா. அன்பழகன் இம்மாதம் 22ஆம் தேதி சிங்கப்பூரில் காலமானார். தமிழகத்தின் வேதாரண்யம் வட்டம், ஆயக்காரன்புலம் கிராமத்தில் 1943ஆம் ஆண்டு பிறந்த இவர், கலை, இலக்கிய உலகில் ஆற்றிய பணிகள் மகத்தானவை.
கும்பகோணத்தில் அறிவியல் இளங்கலை முதலாண்டையும் பின்னர் சென்னை மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவத்தின் முதலாண்டில் பயின்ற போதிலும், முறையான பட்டங்கள் ஏதும் பெறவில்லை. இருப்பினும், அறிவுத்தேடலும் சமூக அக்கறையும் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தன.