

இந்தியக் கூட்டாட்சியில், 73, 74ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தவை. இவை கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கின; சரியான கால இடைவெளியில்
(ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை) தேர்தல் நடத்த வேண்டும் என்கிற அரசியல் கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகளுக்கு விதித்தன. ஆனால் நிர்வாகத் தாமதங்கள், சட்டக் காரணங்கள் அல்லது அரசியல் ஆதாயங்கள் ஆகியவற்றின் பெயரால் மாநில அரசுகள் தங்கள் ஜனநாயகக் கடமைகளைத் தள்ளிப்போடுகின்றன.
கடந்த 30 ஆண்டுகளாக எந்தத் தடையுமின்றி, சரியான நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை கேரளம் நடத்திவருகிறது. இந்த வெற்றியானது அரசியல்-கொள்கை, நிர்வாகக் கட்டமைப்பு மாற்றங்களின் விளைவு. பிற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பல பாடங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.
மக்கள் பங்கேற்பு, அடித்தட்டு மக்கள் சார்ந்த திட்டமிடல் (Bottom-up Planning) என்கிற எண்ணத்தை மக்கள் திட்டப் பரப்புரை (People’s Plan Campaign) – 1996 ஆழமாக நிலைநாட்டியது. இதனால் உள்ளாட்சித் தேர்தல்களைச் சரியான நேரத்தில் நடத்துவது என்பது கேரள மாநில அரசியல் நெறியாகவே மாறியது. அதேபோல், கேரளத் தேர்தல் ஆணையம் தெளிவான அதிகாரங்கள் கொண்டது.