

தமிழ்நாட்டில் உள்ள 24 அரசுப் பல்கலைக் கழகங்களில் 17 பல்கலைக்கழகங்களுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாகத் துணை வேந்தர்கள் இல்லை என்னும் சூழல் தொடர்கிறது. இதனால், பல்கலைக்கழகங்களும் இணைப்புக் கல்லூரிகளும் மிகப் பெரிய பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்துவருகின்றன.
ஒரு துணைவேந்தர் முடிவெடுத்து, நாள்தோறும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்து, அன்றாட நடவடிக்கைகளுக்காகச் செய்ய வேண்டியதை, மூன்று போ் கொண்ட துணைவேந்தர் குழு, ஒவ்வொரு கோப்பிலும் ஒப்புதலும் கையெழுத்தும் இடுவதற்கு மிகுந்த தாமதம் ஏற்படுகிறது.
ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் வெவ்வேறு ஊர்களில் இருக்கின்றனர். உயர் கல்விச் செயலர் சென்னையில் இருக்கிறார். அத்துடன் கல்விச் செயலர், 17 பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழுக் கூட்டம் (Syndicate Meeting), நிதிக்குழுக் கூட்டம் (Finance Committee) ஆகியவற்றில் பங்கெடுத்து, பல நூறு கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துக் கையொப்பமிடுதல் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
இதனால் நியமனங்கள், பதவி உயர்வு, ஓய்வூதியப் பலன், நிதி மேலாண்மை, ஆராய்ச்சி நடவடிக்கைகள், அரசு நிறுவனங்கள் / பிற நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுதல், பட்டங்களில் கையொப்பமிடுதலைப் போன்று அனைத்து நடவடிக்கைகளும், ஏறத்தாழ ஒட்டுமொத்தமாகத் தடைபட்டு நிற்கின்றன. இதனால் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாழாகிவருகிறது.
காரணிகள் என்னென்ன?
துணைவேந்தர் நியமனம் பல காரணங்களால் தடைபட்டுள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 2018இன்படி, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்பதை மாநில ஆளுநர் வலியுறுத்திவருவது ஒரு காரணம்.
முந்தைய அரசு, தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வா்தான் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 2022இல் மசோதா நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பியது.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் இதுநாள் வரை ஒப்புதல் அளிக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும், தமிழக அரசும் தனியாரும் தொடர்ந்துள்ள வழக்குகள்; அது தொடர்பான தீர்ப்புகள், அவற்றின் மீதான மேல் முறையீடுகள் போன்றவை இன்னொரு காரணம்.