

கரிசல் காட்டு எழுத்தின் முன்னத்தி ஏராகத் திகழ்பவர் கி.ராஜநாராயணன். விவசாயிக்கு மழையும் நிலமும் நேரடியாகத் தெரியும் ரத்தபந்த உறவுகள். இந்த உறவின் மகத்துவத்தைக் கொண்டு வருபவனின் கதைதான் கி.ரா.வின் ‘நிலைநிறுத்தல்.’
அந்தக் கரிசல் கிராமத்துக்குப் பஞ்சம் பிழைக்க வருகிறது சாமி கொண்டாடி குடும்பம். அந்தக் குடும்பத்தில் பதினாலு வயசு மாசாணத்தை பண்ணை முதலாளி பார்க்கிறார். வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவன் உண்ணும் முறையைப் பார்த்து விவசாயத்துக்குச் சரியான ஆள் என்று பெருமிதம் கொள்கிறார். வேலை செய்கிறான்; அடிவாங்குகிறான்; அரவணைக்கப்படவும் செய்கிறான்; அப்படியே வளர்கிறான்; திருமணம் செய்து கொள்கிறான். மழையில்லாமல் தாண்டவமாடும் வறட்சியைப் பற்றி ஊரே பேசுகிறது. நேரே பார்வதி அம்மன் கோயில்முன் விழுந்து வணங்குகிறான். என்ன நடக்கிறது என்பது கதையின் முடிவு.