பொருந்தி மிளிரும் குறியீடு | கதை அறியும் கலை
விமர்சரும் கவிஞருமான பிரமிள் இந்தியாவில் வாழ்ந்து மறைந்தாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் இலங்கைதான். இலங்கைப் பின்னணியில், அவர் எழுதிய ‘லங்காபுரி ராஜா’ ஒரு சாதனைக் கதை ஆகும். இக்கதை இலங்கையின் எண்பதுகள் காலகட்ட தமிழர்கள் நிலையைப் பேசுகிறது.
கோபாலகிருஷ்ணன், சிங்களவர்கள் அதிகம் வாழும் லங்காபுரி மலைக்கிராமத்துக்கு நில அளவைப் பணியின் பொருட்டு மாற்றலாகி வருகிறான். காட்டின் ராஜாவான பிரமாண்டமான யானை இப்பக்கம் எப்போதாவது வருகிறது. தூரத்திலிருந்தே அந்த அபூர்வக் காட்சியைக் காணும் மக்கள் வாழ்த்தி மகிழ்கின்றனர். தங்கள் காட்டின் பாதுகாவலன் என்றும் நம்புகின்றனர்.
காட்டை அழித்து கரும்பு பயிரிடுவதற்காக அரசு நிர்வாகம், ஆட்களை ஏவுகிறது. மக்களின் எதிர்ப்பை மீறி யானைகளை அப்புறப்படுத்தும் திட்டம் அமலாகிறது. மரங்களை வெட்டி கூண்டுகளை அமைக்கின்றனர். அதில் மாட்டிக் கொண்ட யானைகள் பிளிறுகின்றன. கூண்டுகளை ராஜா யானை தகர்த்து விடுவிக்கிறது. அதிகாரி நெற்றியில் சுடுகிறான். சுட்ட பின்பும் மிச்சமீதி கூண்டுகளை ஆவேசத்துடன் உடைத்து வெளியேற்றிவிட்டு மரணமடைகிறது. இது கதை.
தங்களின் காட்டையும் வாழ்வையும் காப்பாற்றுகிற அரசன் காடேறி வந்து நிற்கும்போது ‘தொடுவானில் உதித்தெழுந்து அசையாமல் நிற்கிற பர்வதம்போல’ அவர்களுக்கு யானை தோன்றுகிறது. யாராளும் தூக்க முடியாத தந்தம் காட்டின் வாளாக நீண்டிருப்பதாகக் காண்கின்றனர். இந்த யானை வந்து மறைவதுபோல கோபாலின் மகன் அபி சிறுவயதில் காட்டுக்குள் மறைந்துவிடுகிறான்.
சிங்கள தாத்தா தேடி அபியை அழைத்து வருகிறார். வளரவளர காட்டுக்குள் அடிக்கடி சென்று மறைந்துவிடுகிறான். பள்ளிப்படிப்பு முடிந்தபின் அதன்பின், முழுதாகவே மறைந்து விடுகிறான். நாட்டில் சிங்களவரின் வெறியாட்டம் நிகழ்வதும் கதைக்குள் வருகிறது. அபியைத் தேடிவந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் அவன் தலையணை அடியிலிருந்து அமில்கார் கப்ரால், பனான், மண்டேலா நூல்களைக் கைப்பற்றுகின்றனர்.
பிரமிள்
