

உமா வரதராஜன் ஈழத்தின் முக்கியமான படைப்பாளி. அவர் எழுதிய மிகச் சிறப்பான கதைகளுள் ஒன்று ‘அரசனின் வருகை’. கருத்துருவகப் (Allegory) பாணியில் அமைந்த இக்கதை, போரில் இடிக்கப்பட்ட கோயிலைத் திரும்பக் கட்டித் தருவதாக வாக்குறுதி அளிக்க வரவிருக்கும் அரசனைப் பற்றியது. அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க, போரினால் நேர்ந்த மானுடச் சிதைவுகளையும் பேரழிவுகளையும் ‘ஊமையன்’ என்ற கதாபாத்திரத்தின் விவரணை வழியே கதை முன்னிறுத்துகிறது.
ஈழம் என்ற நிலப்பரப்பைக் கதை நேரடியாகச் சுட்டவில்லை என்றாலும், அறுபதாண்டு காலமாகத் தமிழ் இனம் எவ்விதமெல்லாம் சிதைவுக்கு உள்ளானது என்பதை உய்த்துணரும் வகையில் உருவகங்களால் விவரிக்கப்பட்டிருக்கிறது. கருத்துருவகங்களைச் சுமந்து நிற்கும் ஒவ்வொரு வாக்கியமும், வரிகளுக்கு அப்பால் வேறொரு ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொண்ட ஒரு நூற்றாண்டு கால கொடூரங்களையும், அழித்தொழிப்புகளையும் இது மிக அழுத்தமாகப் பேசுகிறது. ஓர் இனத்தின் இன்றைய கொடூரங்கள் தொன்ம காலத்துப் பின்னணியில் வைத்துச் சொல்லப்பட்டுள்ளன.
அரசன் வரவிருப்பது தெரிவிக்கப்படுகிறது. பேசும் ஆற்றலையே இழந்துபோன ஊமையனின் உள்ளத்தில் பழைய நினைவுகள் கொந்தளித்து எழுகின்றன. ‘அப்போதைய பிணங்களின் எரிந்த வாடை இன்னமும் அகலாமல் நகரத்தின் வானத்தில் தேங்கிப் போய் நின்றது. சிங்களப் படைகள் நகரில் நுழைந்து செய்த அட்டூழியங்கள், கரும்புத் தோட்டத்தில் புகுந்த யானைகள் துவம்சம் செய்ததுபோல் ஆயின. சவரக் கத்தி வைத்திருந்ததற்காக ஊமையனைப் பாதணிகள் இல்லாமல் கொதிமணலின் நடுவில் முழங்காலிட வைத்தனர். சூரிய நமஸ்காரம் செய்யும்படிச் செய்து, வாயில் கல்லைத் திணித்து வயிற்றில் குத்திய குத்தில் ‘அம்மா’ என்ற வார்த்தைகூட கல்லைத் தாண்டி வரவில்லை.