

வண்ணநிலவன், கந்தர்வன் போன்ற படைப்பாளிகள் நுட்பமான முறையில் யதார்த்த உலகினைக் கதைகளில் விவரித்த போக்குக்கு மாறாக, உக்கிரமான யதார்த்தத்தை தமிழில் முதன்முதலில் பதிவு செய்தவர் திலீப்குமார். மிகையுணர்ச்சிகளையும் போலி மதிப்பீடுகளையும் முற்றாகத் துறந்த அப்பட்டமான சித்திரங்களால் உருவான நிதர்சனமே அவரது படைப்புலகம். அந்த வகையில், திலீப்குமாரின் மிக முக்கியமான சிறுகதைகளுள் ஒன்று ‘மூங்கில் குருத்து’.
கதையின் நாயகன் கிருஷ்ணாஜிராவ், தையல் கடையில் பத்து பேரோடு வேலை செய்கிறவன். மூல வியாதி முற்றி அப்பா சீரழிந்து இறந்ததைப் பார்த்தவன். இவனது முதலாளி பத்மநாத்ராவ், சுபீட்சத்திலிருந்து தரித்திரத்துக்குச் சரிந்தவர். மல்யுத்த வீரன் கிங்காங்குக்கு சூட், பெருந்தலைவர் காமராஜருக்குக் கதர்ச் சட்டை தைத்துக் கொடுத்த புகழுக்குரியவர். குதிரைப் பந்தயம், ஆங்கிலோ-இந்தியப் பெண்களுடனான தொடர்பு, சினிமா தொழில் எனப் பணத்தை இழந்தவர். அவருக்கு நான்கு குழந்தைகள்.
புதுப் படங்கள் திரையிட்டால் நண்பர்களோடு படத்துக்குப் போவார்; சிகரெட் பிடிப்பார்; வேலை செய்பவர்களைக் கண்டபடி ஏசுவார். அவரது பெரிய மகள் பக்கத்து வீட்டில் வார இதழ் வாங்கி வருவதைப் பார்த்தால் அடிஅடியென்று அடிப்பார்; நண்பர்களோடு குடித்து மகிழ்வார். இவன் கடையின் கணக்கு வழக்கு பார்ப்பதோடு, அவரது குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுப்பான். அவர் மராத்தி, இவன் குஜராத்தி.