

‘கசடபதற’ இலக்கிய இதழை நடத்திய நா.கிருஷ்ணமூர்த்தி, குறைந்த எண்ணிக்கையிலேயே கதைகள் எழுதியிருந்தாலும், தமிழ் இலக்கியத்துக்கு மிகச் சிறந்த படைப்புகளைத் தந்தவர். மனித மனங்களில் வரையறுக்க முடியாத புதிராகப் பதுங்கியிருக்கும் இயல்புகளை இவரது கதைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
காவிரியில் புதுவெள்ளம் பெருகியோடும் வேளையில், ஆற்றங்கரையில் நிற்கும் அண்ணாமலைக்குச் சிறுவயது முதல் தான் ஆற்றில் தத்தளித்தவர்களைக் காப்பாற்றிய நினைவுகள் மேலெழுகின்றன.
24 வயதில் கோபாலய்யரின் மருமகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டபோது அவள் கூந்தலைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றியது, ஆறுமுகப் படையாச்சியின் தாயாரைச் சுழலிலிருந்து மீட்டது, செட்டியார் வீட்டில் திருடிவிட்டு ஆற்றைக் கடக்க முயன்ற திருடர்களைச் சுழலிலேயே மடக்கிப் பிடித்து இழுத்து வந்தது என அவனது நீச்சல் சாகசம் மாயவரம் வரை புகழ்பெற்றிருந்தது.
அப்போது, அக்கரையிலுள்ள பாப்பாஞ்சாவடிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு சிதம்பரம் என்னும் ஏழை இக்கரை வழியாக வருகிறான். முலாம் பூசும் தொழிலாளியான அவனுக்கு நீச்சல் தெரியாது; நான்கு குழந்தைகளும் உண்டு; மனைவியும் இறந்துவிட்டாள்.
தோணிக்காரன் கூடுதல் கட்டணம் கேட்பதால் யோசிக்கும் சிதம்பரத்திடம், இரண்டு ரூபாய் மிச்சமாகுமென்றும் தானாகவே அக்கரைக்கு அழைத்துச் செல்வதாகவும் அண்ணாமலை கூறுகிறான். தன் பழம்பெரும் வீரதீரங்களை அவன் விவரிக்க, அதை நம்பி சிதம்பரமும் அவனோடு ஆற்றில் இறங்கி கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான். இவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் ஆபத்தான போக்கை மையமாகக் கொண்டதுதான் ‘மனிதர்கள்’ சிறுகதை.