

முரண்பாடுகளின் ஊடே நகரும் குடும்ப உறவுகளின் சிக்கல்களை நுட்பமாக எழுதுபவர் எம்.கோபாலகிருஷ்ணன். அதில் பெண்களின் உலர்ந்த கண்ணீர்தடத்தைக் கண்டு சொல்லும் பரிவை இயல்பாகப் பெற்றவர். அவர் எழுதிய கதை ‘சூடக் கொடுத்தவள்.’
கோவை – மயிலாடுதுறை சதாப்தி விரைவு வண்டியில் கோயில் காரியமாக அடிக்கடி பயணம் செய்பவள் அந்தப் பெண். 38 வயதான அவள், பயணத்திலேயே அம்மனுக்கு மாலை தொடுப்பாள். நண்பர்கள் பட்டு சாத்தத் தந்தால் ஒப்படைப்பாள்; பிரசாதம் தருவாள். சமையல்காரரான அவளது கணவர் வடநாட்டு திவ்யதேசங்களுக்குச் செல்பவர். அவரது தொடர்புகள் வழியே வேண்டுதலை நிறைவேற்றும் அவளது வாழ்விலும் தீராத முரண் ஒன்று உறுத்துகிறது. அதைத் தொட்டுத் திறப்பதே இக்கதை.
குளிரூட்டப்பட்ட பெட்டியில் தம்பதியர் ஏறுகின்றனர். எதிரில் அமர்ந்து அவள் பூக்களை மாலையாக்குகிறாள். பிச்சி, சம்பங்கி, ரோஜா மணம் வீசுகிறது; எவர்சில்வர் பாத்திரத்தில் முல்லை நிரம்பியுள்ளது. அறிமுகத்திற்குப் பின் தம்பதியர் கும்பகோணம் செல்வதாகவும், இவள் மாயவரம், திருக்கடையூர் கோயில்களுக்கு தோள்மாலை கொண்டு செல்வதாகவும் கூறுகிறாள்.