

இலங்கையின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரான எஸ். பொன்னுத்துரையின் (எஸ்.பொ.) தனித்துவமிக்க சிறுகதை ‘அணி’. சலூன் கடைக்கு வந்த புதிய வாடிக்கையாளரிடம் நாவிதர் உரையாடுவதாகக் கதை நகர்கிறது. வாடிக்கையாளரின் மெல்லிய ஆமோதிப்புகள், குறுகிய பதில்கள் மற்றும் மறுப்புகளை நாவிதரின் ஒற்றைக் குரல் வழியே ஆசிரியர் நேர்த்தியாக விவரிக்கிறார். முடிவெட்டும்போது தலையை அசைக்காமல் மட்டுமே பேச முடியும் என்பதால், இந்த ‘ஒற்றைக் குரல் உத்தி’ கதைச்சூழலுக்கு மிக இயல்பாகப் பொருந்துகிறது.
“வேலை மாற்றலாகி வரவில்லையா?”, “மட்டக்களப்பிலிருந்து நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க வந்திருக்கிறீர்களா?”, “லியூ–சாவூ–ஸி என்றா சொன்னீர்கள்?”, “அங்கு அவ்வளவாகச் சாதி பார்ப்பதில்லை என்கிறீர்களா?” என உரையாடல் வழியே வாடிக்கையாளரின் குரலையும் கதைசொல்லியே வெளிப்படுத்துவது சிறப்பு.
அண்ணன் - தம்பி இணைந்து நடத்தும் சலூன் அது. அண்ணன் மகன் விக்டர் படிக்க ஆசைப்படுகிறான். ஆனால், பள்ளியில் எதிர்கொண்ட சாதிய ஏளனங்களால் ஏழாம் வகுப்போடு அவனது கல்வி முடங்குகிறது; வேறு வழியின்றி நாவிதர் தொழிலுக்கே வருகிறான். சலூனில் எப்போதும் ஒலிக்கும் அரசியல் விவாதங்கள் விக்டரை ஓர் அரசியல் செயல்பாட்டாளனாக மாற்றுகின்றன.