

மனித வாழ்வியலை இயற்கையின் பேருண்மைகளோடு பிணைத்து ஆழமான தரிசனங்களை ந.பிச்சமூர்த்தியின் எழுத்துலகம் உருவாக்குவது. நடுத்தர வயதைக் கடந்த ஒரு சாமானிய அரசு ஊழியரின் அன்றாடப் பாடுகளையும், அவனது அகத் தத்தளிப்புகளையும் அதன் அடியாழத்து அடர்த்தியோடு பேசுகிறது பிச்சமூர்த்தியின் ‘ஒருநாள்’ சிறுகதை.
காலையில் அலுவலகத்துக்குக் கிளம்புவது, வழியில் எதிர்கொள்ளும் மனிதர்களின் சிடுசிடுப்புகள், இயந்திரத்தனமான பணிச்சூழல், மாலை ஐந்து மணிக்குக் குளக்கரை வழியே வீடு திரும்புவது என ஒரு சாமானியனின் தினசரி நகர்வே இக்கதையின் அச்சு. மூன்று பிள்ளைகளின் தந்தையான அவன், குடும்பம், கடன், பயணம், அலுவலகம் எனப் பல முனைகளிலும் பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறான். வயிற்றுப்பசி எனும் முளைக்குச்சியில் கட்டப்பட்டு, காலச்சக்கரத்தில் ஓயாமல்சுழலும் ஒரு மாதச்சம்பளக்காரனின் வாழ்வை இக்கதை மிக நேர்த்தியாகப் படம்பிடிக்கிறது.
மளிகைக் கடைக்கடன் ரூ.150 ஆக உயர்ந்துவிட்டதால், கடைவீதி வழியே செல்லவே மகன் அஞ்சுகிறான் என மனைவி சாடுகிறாள். “இப்போது கையில் காசில்லை, தேதி 13 ஆகிவிட்டது தெரியாதா?” என்று சலித்துக் கொள்ளும் அவனுக்குள், ‘தம்ளரில் இருக்கும் தண்ணீர் பார்ப்பதற்குத்தான் அமைதி; பூதக்கண்ணாடி வழியே பார்த்தால் அது சமுத்திரத்தின் பேரலைகளைப் போலப் பொங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும்’ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. வெளியே கவலையற்றவன் போல் தோன்றும் சாமானியனின் அகத்துக்குள் நிகழும் இத்தகைய உணர்வுப் பேரலைகளைப் பிச்சமூர்த்திதன் மொழி ஆளுமையால் அசாத்தியமாகச் சாத்தியப்படுத்தியுள்ளார்.