

பின்நவீனத்துவத்தின் வருகை தமிழ்ச் சிறுகதை வெளியைப் பன்முகத்தன்மையுடன் திறந்துவிட்டது. 1980களுக்குப் பின், வரலாற்றையும் புனைவையும் பரஸ்பரம் பிணைத்து விதவிதமான கதைகள் எழுதப்பட்டன. இவ்வகையில் ஜெயமோகன், மறைந்துபோன கடந்தகாலத் தமிழ்ச் சமூகக் கதவுகளைத் திறந்து, தன் புனைவாற்றலுடன் படைத்த மிகச்சிறந்த சிறுகதைகளுள் ஒன்று ‘ஊமைச் செந்நாய்’.
கதைக்களம்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அதிகாரியாக வரும் வில்சன் துரைக்கு, சமையல்காரன் தோமாவும், ‘ஊமைச்செந்நாய்’ என்றழைக்கப்படும் பழங்குடி இளைஞனும் பணிவிடை செய்கின்றனர். கரிய நிறமும், செந்நாயின் சிவந்த கண்களும் கொண்ட அந்த இளைஞன், ப்ளெட்சர் துரையால் அவன் தாய் சீரழிக்கப்பட்டதால் பிறந்தவன்; இதனால் அவனது கண்கள் மட்டும் வெள்ளையர்களின் சாயலில் இருக்கின்றன. காட்டில் உலவும் பிரம்மாண்டமான கரிய கொம்பன் யானையை வேட்டையாடத் துணியும் வில்சன், காட்டை நன்கு அறிந்த ஊமைச்செந்நாயை வழிகாட்டியாக்கிக் கொள்கிறான். இந்த வேட்டைப் பயணத்தின் ஊடே, வெள்ளையர்கள் மலைமக்களை நாசமாக்கியதையும், அவர்களின் வெறுப்பின் குரூரத்தையும் விவரிப்பதே இக்கதை.