

எழுத்தாளர் சுஜாதாவின் புனைகதை உலகம் வாசகனை சட்டென்று தன்வயப்படுத்தும் வித்தையைத் தாராளமாகக் கொண்டது. வாசிப்பில் எதிர்பாராத ஒரு திகைப்புச் சுவையைத் தரவேண்டும் என்ற நோக்கம் மேலோங்கி எழுதப்பட்ட அவரது கதைகள், முடிவு சார்ந்து வாசகன் யூகிக்க முடியாத திடீர் திருப்பங்களைக் கொண்டவை. ஆனால், கதையின் சுவாரஸ்யத்துக்காகக் கணக்குப்போட்டு வைக்கப்படும் இத்தகைய அதிரடி முடிவுகள், சில நேரங்களில் கதையின் இயல்பான உயிரோட்டத்துக்கும் பாத்திரங்களின் மனோநிலைக்கும் நேரெதிராகப் போய்விடுவதும் உண்டு.
அவரது ‘முரண்’ என்ற கதை இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பள்ளிக் குழந்தைகளுக்காக 25 ஆண்டுகள் நேர்மையுடன் வாகனம் ஓட்டிய குமாரசாமி, நிர்வாகத்தின் பாராட்டுதலையும் சக ஆசிரியர்களின் அங்கீகாரத்தையும் பெறுகிறார். பணி ஓய்வுபெறும் நாளில் அவரின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி பள்ளி நிர்வாகம் அவருக்கு சிறப்பு செய்கிறது. எனினும் நிர்வாகம் வழங்கிய பணத்தை பெற்றுக்கொள்ள மறுக்கிறார். அச்செயல் பள்ளியின் ஆசிரியர்கள், மற்ற பணியாளர்களிடம் அவரின் மதிப்பை உயர்த்துகிறது.