

சமூக உறவுகளின் சாதக பாதகங்களை, அதன் உன்னதங்களை மற்றும் பலவீனங்களை உயிர்த்துடிப்புடன் அள்ளி இணைத்தபடியே மனிதர்களின் இதயங்களைத் திறந்து காட்டியவர் கு.அழகிரிசாமி. மனித வாழ்வின் எளிய பக்கங்களில் இருந்து உன்னதமான உண்மைகளைக் கண்டறிவதே சிறுகதை என்பதைத் தன் எழுத்துகளால் நிரூபித்தவர் அவர்.
இருவர் கண்ட ஒரே கனவு: அழகிரிசாமியின் ‘இருவர் கண்ட ஒரே கனவு’ என்ற கதை, வறுமையில் வாழும் இளம் விதவையான வெள்ளையம்மாளின் கதையைக் கூறுகிறது. ஆறு வயதும் ஐந்து வயதுமான இரு ஆண் குழந்தைகளுடன், மாடு கட்டும் கொட்டிலின் ஓரத்தில் ஒரு தட்டியை மறைத்து வாழும் அவளுக்கு, எழவோ பேசவோ முடியாத அளவு நோய்மை சூழ்கிறது.
அவள் குளிர் காய்ச்சலால் கூலி வேலைக்குப் போக முடியாமல் முடங்கிக் கிடக்கிறாள். உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வெளியே போயிருக்க முடியாது, ஏனெனில் அவளிடம் உடுத்திக் கொள்ளத் தகுந்த துணி இல்லை. அந்த ஊரில் வேலை கிடைக்கும் நாட்களில் கூட, நாலைந்து விதவைகள் துணியில்லாமல் வீட்டை அடைத்துக்கொண்டு அரைப்பட்டினியோ முழுப்பட்டினியோ கிடப்பது சகஜமாக இருக்கிறது.