

எவரையும் தீவிர தாக்கத்துக்கு உள்ளாக்குவதே சிறந்த ஆக்கக்கலை. அந்தத் தாக்கத்தின் பாதிப்பு, உண்மைத்தன்மை என்ற அம்சத்தின் இழைகளால் உள்ளே புதைந்திருப்பதில் இருந்து உருவாகிறது. பணம் இல்லாதவர்களுக்கும் ரசனை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அத்தோடு கடுமையான வாழ்க்கைப் பிரச்சினை இருக்கிறது என்பதெல்லாம் வெகுஇயல்பாகக் கூடி உருவான கதைதான் வண்ணநிலவனின் ‘கரையும் உருவங்கள்.’
சங்கர் படித்தவன். வேலை அமையாமல் அலைக்கழிகிறான். நண்பர்களை, பெற்றோர்களை எதிர்கொள்ள முடிவதில்லை. ‘ராதையின் நெஞ்சமே...’ பாடல் ஒலிக்கும்போது நின்று முழுதாகக் கேட்பவன், இன்று கேட்காமல் நடக்கிறான். சாக்கடையைத் தாண்டும்போது பழைய செருப்பின் வார் அறுந்துவிடுகிறது. கையில் பிடித்து நடக்கிறான். நாளைக்குத் தைத்துக்கொள்ளலாம் என்று அவனுக்கு தோன்றுகிறது.