

அ.முத்துலிங்கத்துக்குப் பல நாடுகளில் தங்கி வேலை செய்யும் நல்வாய்ப்பு அமைந்தது. அதனை தன் படைப்புகளுக்கு மிகப்பெரிய சாதகமாக ஆக்கிக் கொண்டார். பண்பாட்டுப் பின்னலின் இறுக்கத்தின் ஊடே சொல்லமுடியாத வேதனை இருந்து கொண்டிருப்பதை ‘யதேச்சை’ என்ற ஆப்கானிஸ்தான் பின்னணி கதையில் படைத்துக் காட்டியிருக்கிறார்.
ரஸீமாவின் குழந்தைப் பருவத்துத் தோழன் காசிம். 11 வயதில் முக்காடுபோட்டப் பின் இவர்கள் நட்புக்கு இடமில்லாமல் போகிறது. 13 வயதில் ரஸீமாவை அஹமத்துக்கு மணம் முடித்துவைக்கின்றனர். 5 வயதாகும் அஹமத்தின் தம்பி நியாஸை தன் பிள்ளைபோல தூக்கி வைத்து விளையாடுகிறாள். கண்ணி வெடியில் சிக்க அஹமத் இறந்துபோகிறான். ரஸீமா 15 வயதில் விதவை ஆகிறாள்.
கணவனின் தம்பி நியாஸுக்கு 18 ஆண்டுகள் முடிய 13 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். அவனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். தாலிபான்களின் கெடுபிடிகளில் மக்கள் இருக்கிறார்கள். 9 வயதுக்குமேல் பெண்கள் படிக்கக்கூடாது. வேலைக்குச் செல்லக்கூடாது. உடலை ‘சாதர்’ துணியால் மூடிக்கொள்ள வேண்டும். இப்பின்னணியிலான கதைதான் ‘யதேச்சை.’