நெருக்கடியில் நிகழும் திருப்பம் | கதை அறியும் கலை
எதிர்பாராத வகையில் கதையின் போக்கையே மாற்றிவிடும் திடீர் திருப்பம் கொண்ட கதை முடிவை ‘ஓ ஹென்றி டச்’ என்று கூறுவது உலகளாவிய ஒரு வழக்கு. பலர் கதையின் சுவாரஸ்யத்துக்காக எதிர்பாராத திருப்பத்தை வைத்தபோது பூமணி வாழ்வின் நெருக்கடியிலிருந்து உண்மையின் கொதிப்பையே திருப்பமாக வைத்தார். பூமணியின் ‘நேரம்’ அவ்வகைக் கதை.
‘பம்பல்காலம்’ எனப்படும் விவசாய வேலை மும்முரமாக நடக்கும் காலத்தில் நாலு காசு சம்பாதித்தால்தான் காலம் தள்ள முடியும். களை எடுத்தல் நடந்துகொண்டிருக்கிறது. நான்கு மாத கைக்குழந்தையை கருவை மரநிழலில் தொட்டில் கட்டி தூங்கப்போட்டுவிட்டு வேலை செய்கிறாள் அண்ணாமலை. முதலாளியம்மாள் நஞ்சைக்காரம்மா, பெரும்பாலும் வேலையின் வேகம் தடைபடும் என்பதால் கைக்குழந்தைக்காரிகளை வேலைக்கு விடமாட்டாள். அண்ணாமலை கெஞ்சிக் கேட்டுவந்து வேலை செய்கிறாள்.
