

இந்தியாவின் நீடித்த நீலப் பொருளாதாரக் கொள்கையின் கீழ், கடலோரப் பகுதிகளில் மீன்வளத் தொழில்முனைவானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு முக்கியக் கூறாக உருவெடுத்துவருகிறது.
இத்தகைய தொழில்முனைவுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், புதிய வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறியவும் விரிவுபடுத்தவும் வாய்ப்பு அளிக்கின்றன. எனினும், சமூகம் - சுற்றுச்சூழல் சார்ந்த இணைப்புடன் இருக்கும் மீன்வளத் தொழில்முனைவு, எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்னும் கேள்வியும் எழுகிறது.
கொள்கை முரண்கள்
இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்) செயல்படுத்திவரும் ‘அனைவருக்கும் மீன் ஆராய்ச்சி - பயிற்சி மைய’த்தின் பல வருட அனுபவங்கள் - மீன்வளத் தொழில்முனைவை வெறும் வர்த்தகரீதியாகவோ, தொழில்நுட்பரீதியாகவோ மட்டும் பார்க்க முடியாது என்பதைக் காட்டுகின்றன.
இது உள்ளூர் மீனவ / கடலோர மக்கள், அவர்கள் வாழும் இடம், கடலோரச் சுற்றுச்சூழல் ஆகியவற்றோடு ஆழமாகப் பிணைந்தது. மேலும் சமூக அறிவு, உள்ளூர் வள மேலாண்மை, கடல் சூழலின் நீடித்த தன்மை ஆகியவை திட்டமிடலில் ஒருங்கிணைக்கப்படும்போது மட்டுமே உண்மையான, வலுவான தொழில்முனைவு உருவாகிறது.
எனினும், பெரும்பாலான ஆராய்ச்சி - கொள்கை வடிவமைப்புகள் மீனவச் சமூகங்களை இன்னும் இறுதிப் பயனாளிகளாகவே கருதுகின்றன. எனவே, மீன்வளத் துறையில் அடிப்படை / நீடித்த தொழில்முனைவு சார்ந்த மாற்றங்களை உருவாக்க, திட்டமிடலில் ஒரு பரிமாண மாற்றம் அவசியமாகிறது.
தொழில்முனைவை மேம்படுத்தும் செயல்பாட்டில் சமூக நிறுவனங்களைப் பயனாளிகளாக மட்டும் கருதாமல், இணைச் செயல்பாட்டாளர்களாக அங்கீகரிப்பது - நிலைத்தன்மை கொண்ட மீன்வளத் தொழில்முனைவு நிறுவனங்களுக்கு அவசியமானது.
கடல்வளம், மீன்வளத் துறையில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கொள்கை அமைப்புகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு தவறான கருத்து.