

செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம் குறித்து தமிழ்நாட்டின் கல்விப் பரப்பில் தற்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. அதே வேளையில், ஏஐ-யின் பயன்பாடு முழுவீச்சில் தமிழ்நாட்டின் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் சென்றுசேர்ந்திருக்கிறது. உண்மையிலேயே ஏஐ மூலம் வந்த சாட் ஜிபிடி, ஜெமினி, கிளாடு போன்றவை என்ன மாதிரியான தாக்கத்தை மாணவர்களின் கற்றல் திறனில் ஏற்படுத்தும்? இவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
அறிதிறன் சுமை இறக்கம்: ஏஐ கருவிகள் பல்வேறு வகைகளில் உதவினாலும் மாணவர்களின் கற்றல் திறனில் அவை ஏற்படுத்தும் சிக்கல்களைக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதில் முதலாவது - அறிதிறன் குறைப்பு (cognitive offloading). பார்த்தல், கேட்டல், தொடுதல் போன்ற உணர்வு மூலம் பெற்ற அனுபவத்தை வைத்து அறிவை உருவாக்குதல், அறிவின் மூலம் புதிய ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணுதல், ஒரு விஷயத்தைக் கவனித்து அதன் உள்ளார்ந்த தன்மையைப் புரிந்துகொள்ளுதல் என மூளையில் நடக்கும் இந்தச் செயல்முறை அனைத்தையும் அறிதிறன் அல்லது அறிதிறன் செயல் என்று வரையறுக்கலாம்.