

ஹரியாணா மாநிலத்தின் ஜீந்த் - சோனிபத் இடையே 89 கி.மீ. ஓடக்கூடிய இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் மோடி ஜூலை 17 அன்று தொடங்கி வைத்திருக்கிறார்.
காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தாத, மாற்று எரிபொருளான வெறும் தண்ணீரில் (ஹைட்ரஜன்) ஓடுகிற ரயிலை அறிமுகம் செய்திருக்கும் ஆறாவது நாடு இந்தியா. தற்போதைய கச்சா எண்ணெய் நெருக்கடிக்கும் இது தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 ரயில் பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் மின் ஊக்கிகளால் செயல்படுகின்ற இந்த ரயிலில் 2,600 பேர்வரை பயணம் செய்ய முடியும். இந்த ரயிலில் புகை வெளிவராது.
நீராவி மட்டும்தான் வெளிவரும். காற்றில் கலக்கும் அந்த நீராவி மீண்டும் தண்ணீராகி பூமிக்கு வந்துவிடும். அந்த வகையில் ஹைட்ரஜன் ரயில்கள் உலகின் எதிர்காலத்தைப் பசுமைமிக்கவையாக மாற்றுகிற கனவை நோக்கி விரைந்தோடுகின்றன.
ஹைட்ரஜன் ஏன் முக்கியமானது?
பிரபஞ்சத்தில் அதிகம் காணப்படும் தனிமம் ஹைட்ரஜன். சூரியன்கூட ஹைட்ரஜனால்தான் ஒளிர்கிறது. ஒரு கிலோ ஹைட்ரஜன், ஒரு கிலோ பெட்ரோலைவிட மூன்று மடங்கு அதிக ஆற்றலை வழங்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஹைட்ரஜனை எரிபொருளாக்கிப் பயன்படுத்தும்போது கார்பன் டையாக்சைடு - கார்பன் மோனாக்சைடு போன்ற மாசுகள் வெளியேறுவதில்லை.
1766இல் பிரிட்டன் விஞ்ஞானி ஹென்றி கெவன்டிஷ் முதல் முறையாக ஹைட்ரஜன் வாயுவைக் கண்டறிந்து அறிவித்தார். அதற்கு எரியக்கூடிய காற்று (Inflammable air) என்று பெயரிட்டார்.
1783இல் பிரெஞ்சு வேதியியலாளர் அந்த்வான் லவாய்ஸியே இந்த வாயுவுக்கு ஹைட்ரஜன் என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் ஹைட்ரோ என்றால் தண்ணீர். ஜீன்ஸ் என்றால் உருவாக்குவது.
அதாவது, தண்ணீரை உருவாக்கும் தனிமம் என்பதே ஹைட்ரஜன் என்கிற சொல்லின் பொருள். 1839இல் வேல்ஸைச் சேர்ந்த சர் வில்லியம் க்ரோவ், முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத்தை உருவாக்கினார்.
இதுவே இன்றைய ஹைட்ரஜன் ரயில்களின் அடிப்படைத் தொழில்நுட்பம். ஹைட்ரஜன் மின்கலம் உலக அதிசயங்களில் ஒன்று. 1960-களில் நாசாவின் ஜெமினி, அப்போலோ விண்கலங்களில் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன்கள்தான் பயன்படுத்தப்பட்டன.